என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    அஜித் நடிக்கும 57-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பும் வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்..
    சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் 57-வது படமாக உருவாகிவரும் படத்துக்கு சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு தலைப்புகளை வைத்து ரசிகர்கள் யூகங்களை கிளப்பிக் கொண்டிருந்தனர். ஆனால், படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தலைப்பும் வெளியிடப்படவில்லை.

    இருப்பினும், சிறுத்தை சிவா - அஜித் கூட்டணியில் வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்ததால், இந்த படத்தின் தலைப்பின் முதல் எழுத்தும் ‘V’ என்ற ஆங்கில எழுத்து முதலில் வரும்படிதான் தலைப்பு இருக்கும் என்று ஆணித்தரமாக கூறப்பட்டது.

    அப்படி கூறப்பட்ட தலைப்புகளில் ‘விவேகம்’ என்ற தலைப்பையே படக்குழுவினர் இறுதியாக முடிவு செய்து வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 2-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிடப்போவதாக அறிவித்தனர். அதன்படி, இன்று அதிகாலை 12 மணியளவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் எல்லோரும் நினைத்ததுபோல் ‘விவேகம்’ என்றே படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். மேலும், அஜித் தனது முரட்டு உடம்பை காட்டியபடி, மேல் சட்டை அணியாமல் ராணுவ பேண்ட் அணிந்து காட்சியளிக்கிறார்.

    இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் இந்த போஸ்டருக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

    இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. 
    டைரக்டர் ஸ்ரீதர் படத்தில் நடிக்க விரும்பிய விஜயகுமார், அவர் நடத்திய புதுமுகங்களுக்கான தேர்வில் கலந்து கொண்டார்.
    டைரக்டர் ஸ்ரீதர் படத்தில் நடிக்க விரும்பிய விஜயகுமார், அவர் நடத்திய புதுமுகங்களுக்கான தேர்வில் கலந்து கொண்டார்.

    சிவாஜியும், பத்மினியும் நடித்த "ஸ்ரீவள்ளி'' படத்தில் பாலமுருகனாக நடித்தாலும் அதற்குப்பிறகு புதிய படங்கள் எதுவும் விஜயகுமாருக்கு கிடைக்கவில்லை. இதனால் நாடகங்களில் நடித்தபடி, சினிமா வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தார்.

    நாலைந்து வருடம் இதே நிலை நீடித்தது. ஆனாலும் சோர்ந்து விடாமல் எஸ்.வி.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்து நடித்துக் கொண்டு இருந்தார்.

    இந்த சமயத்தில் டைரக்டர் ஸ்ரீதரின் "நெஞ்சில் ஓர் ஆலயம்'' படம் வந்தது. காதலை புதிய கோணத்தில் அணுகிய காட்சிகள் ஸ்ரீதருக்கு பெரும் புகழைத் தந்ததோடு, படத்தையும் வெற்றிப் பட்டியலில் சேர்த்தது.

    இந்தப்படம் வெளிவந்த நேரத்தில் வையாபுரி ஜோதிடர் மூலம் விஜயகுமாருக்கு நடிகர் முத்துராமன் அறிமுகமானார். முத்துராமன் படங்களில் நடித்து வந்ததோடு நாடகங்களிலும் நடித்தார். அப்போது `வடிவேல் வாத்தியார்', தேரோட்டி மகன்' நாடகங்கள் ரசிகர்களை பெரும் அளவில் ஈர்த்தன. முத்துராமன் படங்களில் வளரத் தொடங்கிய நேரமாதலால், அப்போது அவர் நடித்து வந்த இந்த நாடகங்களில் தொடர்ந்து நடிக்க நேரம் கிடைக்காத நிலை. அதனால், தான் நடித்து வந்த கேரக்டரில் விஜயகுமாரை நடிக்க வைக்க முத்துராமனே சிபாரிசு செய்தார்.

    இதைத் தொடர்ந்து "சுயம்வரம்'' என்ற புதிய நாடகத்திலும் விஜயகுமாருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. இதில் "இரவும் பகலும்'' பட கதாநாயகி வசந்தா, காந்திமதி ஆகியோரும் நடித்தார்கள். இரவில் நாடகத்தில் நடிப்பது, காலையில் பட வாய்ப்புக்கான முயற்சி என்று விஜயகுமார் தீவிரப்பட்டது இந்த சமயத்தில்தான்.

    இந்த நேரத்தில்தான் டைரக்டர் ஸ்ரீதர் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வந்தார். இதே மாதிரியான எண்ணம் மற்ற டைரக்டர்களுக்கும் இருந்தது. இதனால், டைரக்டர் ஸ்ரீதர், டைரக்டர்கள் ராமண்ணா, பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன் ஆகியோர் ஒன்று சேர்ந்து, "மூவி மேக்கர்ஸ் கவுன்சில்'' என்ற அமைப்பை உருவாக்கினர்.

    இந்த அமைப்பு மூலம் புதுமுகங்களை தேர்ந்தெடுத்து படம் தயாரிப்பது அவர்கள் எண்ணம். இதற்காக புதுமுகத் தேர்வும் நடத்தினார்கள். அதில் விஜயகுமாரும் கலந்து கொண்டார்.

    அதுபற்றி அவர் கூறுகிறார்:-

    டைரக்டர் ஸ்ரீதர் புதுமையை விரும்பினார். துணிச்சலாக தனது படங்களில் புதுமுகங்களை நடிக்க வைத்தார். படத்தையும் வெற்றிப் படமாக்கினார்.

    புதுமுகங்களை தேர்ந்தெடுக்க, ஸ்ரீதரும், மற்ற டைரக்டர்களும் இணைந்து, "மூவி மேக்கர்ஸ் கவுன்சில்'' தொடங்கினர். இதுபற்றி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஐந்தாறு வருடங்களாக புதியவர்கள் சினிமாவுக்குள் வரமுடியாமல் இருந்த நிலை, இனி மாறும் என நம்பிக்கையும் ஏற்பட்டது.

     புதுமுகத் தேர்வு சென்னையில் உள்ள நார்த்போக் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. கட்டுக்கடங்காத கூட்டம். பார்க்கிற முகங்களில் எல்லாம் `கதாநாயக' களை. இந்த அமைப்பில் டைரக்டர் ராமண்ணாவும் இருந்ததால், நிச்சயம் நாம் தேர்வு செய்யப்பட்டு விடுவோம் என்று நம்பினேன்.

    இந்த இடத்தில் டைரக்டர் ராமண்ணா பற்றி சொல்லியே ஆகவேண்டும். "ஸ்ரீவள்ளி'' படத்திற்குப் பிறகு, "நேரம் வரட்டும்; நானே கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்'' என்று சொல்லியிருந்தார். அதனால் நாடகங்களில் நடித்தாலும் அவ்வப்போது வந்து அவரிடம் `ஆஜர்' கொடுத்து விடுவேன்.

    இந்த மாதிரியான ஒருவேளையில் அவர் "சொர்க்கத்தில் திருமணம்'' என்ற படத்தை இயக்கினார். படத்தின் ஹீரோயின் லதா. என்னை ஹீரோவாக போட ராமண்ணா முடிவு செய்திருந்தார். ஆனாலும் ரவிச்சந்திரனே ஹீரோவாக நடித்தார். இதனால் நான் மனதளவில் உடைந்து போய்விடக்கூடாது என்பதற்காக, படத்தில் லதாவை ஒருதலையாக விரும்பும் ஒரு கேரக்டரில் என்னை நடிக்க வைத்தார்.

    இப்படி நம் மேலும் அக்கறைப்பட ஒரு டைரக்டர் இருக்கிறார் என்பது இயல்பாகவே ஒரு தைரியத்தை என் மனதிற்குள் ஏற்றி வைத்திருந்தது. தேர்வுக் குழுவில் டைரக்டர் ராமண்ணாவும் இடம் பெற்றிருந்ததால் நிச்சயம் தேர்வாவோம் என்ற நம்பிக்கையும் வலுப்பெற்றது.

    என் முறை வந்தபோது, ஏதாவது ஒரு காட்சியை நடித்துக்காட்ட சொன்னார்கள். நான் அப்போது நடித்துக் கொண்டிருந்த "வடிவேலு வாத்தியார்'' நாடகத்தில் நான் நடித்த ஒரு காட்சியை நடித்துக் காட்டினேன்.

    ஆயிரக்கணக்கானோர் தேர்வுக்கு வந்த இடத்தில், தேர்வானவர்கள் ஐந்தே ஐந்து பேர்தான். அந்த ஐந்து பேரில் நானும் ஒருவன். ஆம்பூர் பாபு, "அலைகள்'' செல்வகுமார் ஆகியோரும் இந்த ஐவர் குழுவில் இடம் பிடித்திருந்தனர்.

    ஆனாலும் 2 பேர் மட்டும்தான் அப்போது தேவை என்பதற்காக டைரக்டர்கள் குழு மீண்டும் பரிசீலனை செய்தது. முடிவில் `அலைகள்' செல்வகுமார், ஆம்பூர் பாபு ஆகியோரை எடுத்துக்கொண்டு மற்ற 3 பேரிடமும் "முகவரியைக் கொடுத்து விட்டுப் போங்கள். பிறகு தகவல் தெரிவிக்கிறோம்'' என்றார்கள்.

    எனக்கு கோபம் வந்துவிட்டது. என் மீது அக்கறையுள்ளவர் என்பதால் டைரக்டர் ராமண்ணாவை சந்தித்து என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். "என்ன சார்! நீங்கள் இருந்தும் எனக்கு இப்படி ஆகிவிட்டதே!'' என்றேன், வேதனையுடன்.

    நான் இப்படிக் கூறியதும், ராமண்ணாவிடம் இருந்து சிரிப்புதான் பதிலாக வந்தன.

    "என் வேதனை புரியாமல் சிரிக்கிறீர்களே அண்ணா!'' என்றேன்.

    பதிலுக்கு அவரோ, "இவங்க படம் எதுவும் எடுக்க மாட்டாங்க. நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கு நான் இருக்கிறேன்!'' என்றார்.

    மூவி மேக்கர்ஸ் கவுன்சில் பற்றி அவர் சொன்னது உண்மை ஆயிற்று. கடைசி வரை அவர்கள் படமே எடுக்கவில்லை.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார். 
    இயக்குனர் விஜய் மீது தனக்கு எந்த கோபமும் இல்லை என்று அவரது முன்னாள் மனைவியும், நடிகையுமான அமலாபால் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

    இயக்குனர் விஜய்யை அமலாபால் காதலித்து திருமணம் செய்தார். அவரை விட்டுப்பிரிந்த பிறகு படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை விஜய் மீது அவர் குற்றச்சாட்டு எதுவும் கூறவில்லை.

    இந்த நிலையில், மீண்டும் இயக்குனர் விஜய்யுடன் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா? என்று அமலாபால் இடம் கேட்டபோது அவர் அளித்த பதில்....

    “அடுத்த 2 வருடங்களுக்கு சினிமாவில் நடிப்பதை தவிர வேறு நினைப்பு இல்லை. விஜய்யும் நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை. வாழ்வில் எதுவுமே நிலையானது இல்லை. எனவே, இதை எல்லாம் கணிக்க முடியாது.

    நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கிறது. ஆகவே, வருவதை ஏற்று போய்க்கொண்டிருக்க வேண்டும். நானும் விஜய்யும் வாழ்வின் மற்றொரு விதத்தில் சந்தித்திருந்தால் மகிழ்ச்சியுடன் ஒன்றாக வாழ்ந்திருப்போம்.

    இப்போது அவரும், நானும் வேறு வேறு நிலையில் இருக்கிறோம். இரண்டு அழகானவர்கள் தவறான கதையில் சந்தித்தது போல் எங்கள் வாழ்க்கை ஆகிவிட்டது. எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது. இன்னும் எனக்கு பிடித்தமானவர் அவர் தான்”.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தெலுங்கானா மாநிலத்தின் கைத்தறி விற்பனைக்கு தூதராக பிரபல நடிகை சமந்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    தெலுங்கானா மாநிலத்தில் கைத்தறி விற்பனையை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கைத்தறி துணிகளை பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் மகனும், மாநில மந்திரியுமான கே.தாரங்க ராமராவை நடிகை சமந்தா ஐதராபாத்தில் சந்தித்து பேசினார். அப்போது கைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்காக தெலுங்கானா மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதுபற்றி மந்திரி தாரங்க ராமராவ் கூறுகையில், “நடிகை சமந்தா தானாக முன்வந்து கைத்தறி தொழிலாளர்களுக்கு அரசு செய்து வரும் சேவைகளை பாராட்டியுள்ளார். இது கைத்தறி மீது அவருக்கு உள்ள பற்றை காட்டுகிறது. இதற்காக அவரை பாராட்டுகிறேன். தெலுங்கானாவில் கைத்தறி விற்பனையை ஊக்கப்படுத்த சமந்தாவை தெலுங்கானா அரசு தூதராக நியமித்துள்ளது” என்றார்.

    இந்த சந்திப்பின்போது சமந்தாவுக்கு பேச்சம்பள்ளி சேலை, சால்வையை மந்திரி தாரங்க ராமராவ் பரிசாக வழங்கினார். மேலும் சமந்தா நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி தாரங்க ராமராவ் உத்தரவிட்டுள்ளார்.
    ரஜினி தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர் மன்றங்கள் உள்ளது. அவ்வப்போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்தித்து, அவர்களிடம் நலம் விசாரிப்பது வழக்கம். அந்த வரிசையில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்காமல் இருந்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று ரஜினி மாநில மற்று மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் வரவழைத்து அவர்களுடன் உரையாடியுள்ளார். இந்த சந்திப்பு சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடந்துள்ளது. இந்த சந்திப்பின்போது, பல விஷயங்களை ரஜினி தனது மன்ற நிர்வாகிகளுடன் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ரஜினி தற்போது 2.ஓ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ரஜினி ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    தனது அண்ணன் செல்வராகவனுக்காக தனுஷ் மனமுடைந்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    30 வயதுக்குள் சினிமா உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்கள் பட்டியலை பிரபல நாளிதழ் ஒன்று தயாரித்து வெளியிட்டது. அதில், இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த், கவுதம் மேனன், பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ‘துருவங்கள் பதினாறு’ இயக்குனர் கார்த்திக் நரேன் உள்ளிட்ட இயக்குனர்களை பட்டியலிட்டது.

    இந்த பட்டியலை படித்து பார்த்த நடிகர் தனுஷ், அதில் தனது அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் பெயர் இடம்பெறாதது குறித்து மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, அந்த நாளிதழில் வந்த பட்டியலில் செல்வராகவன் பெயர் இடம்பெறாதது வருத்தத்தையும், வலியையும் கொடுக்கிறது. இந்த பட்டியலை தயாரித்தவர்கள் சரியாக ஆராயாமல் செய்ததுபோலவே தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

    செல்வராகவன் தனது 28-வது வயதிலேயே ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர். அதற்கு முன்னதாக இவர் வசனம் எழுதிய ‘துள்ளுவதோ இளமை’  படத்தில்தான் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'சாட்டை' படத்தின் நாயகி மகிமா நம்பியார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது எந்த படத்தில் என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது ‘புருஸ்லீ’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஷார்ப்’, சர்வமும் தாள மையம்’, ‘ஐங்கரன்‘ உள்ளிட்ட படங்கள் உள்ளன. இதில், ‘புருஸ்லீ’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தற்போது, ‘அடங்காதே’ படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், ‘ஐங்கரன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியானை நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தற்போது, மகிமா நம்பியாரை இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    மகிமா நம்பியார் ‘சாட்டை’, ‘என்னமோ நடக்குது’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அருண் விஜய்யுடன் இவர் நடித்த ‘குற்றம் 23’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ‘ஐங்கரன்’ படத்தை ரவி அரசு இயக்குகிறார். இவர் ஏற்கெனவே அதர்வாவை வைத்து ‘ஈட்டி’ என்ற படத்தை இயக்கியவர். காமன் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
    `சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `தல 57' படம் 3 பாகங்களாக உருவாக உள்ளதாக கூறப்படும் தகவல் குறித்த முழு செய்தியை கீழே பார்க்கலாம்.
    `சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `தல 57'. நாளுக்கு நாள்  இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து வரும் `தல 57'   படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் படத்தின் பெயர் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், `தல 57'  படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியிடப்படும் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தை 3 பாகங்களாக எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது. இப்படத்தில் அஜித்,  ஜேம்ஸ் பாண்ட் போல அரசு உளவாளியாக நடித்து வருவதாகவும், 2வது, 3வது பாகங்களுக்குமான கதையையும் ஏற்கனவே  உருவாக்கிவிட்டதாவும் கூறப்படுகிறது.

    இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன், பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் நடித்து  வருகின்றனர்.  அனிருத் இசையமைத்து வருகிறார்.

    ரம்ஜான் வெளியீடாக ஜுன் 23-ம் தேதி `தல 57' படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    `துப்பாக்கி', `கத்தி', `தெறி' படங்களின் பட்டியலில் இணைந்த `பைரவா' படம் குறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
    பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பைரவா’ படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ந் தேதி ரிலீசானது. கிட்டத்தட்ட 55 நாடுகளில்  பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படம் ரிலீசான தேதியில் மட்டும் ரூ.16 கோடிக்கும் மேல் வசூலித்தாக கூறப்பட்டது. அன்றைய  தேதியில் சென்னையில் மட்டும் ரூ.92 லட்சம் வரை வசூல் செய்ததது.

    பின்னர் 4 நாட்களில் `பைரவா' படம் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில்  `பைரவா' படத்தின் வசூல் 40 கோடியை தாண்டியுள்ளது.

    இதற்கு முன்னதாக விஜய்யின் `துப்பாக்கி', `கத்தி', `தெறி' உள்ளிட்ட 3 படங்கள் மட்டுமே 40 கோடி வசூலைப் பெற்றுள்ள நிலையில்  `பைரவா' படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
    கிராமத்து பின்னணியில் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    விஜய் - அட்லி மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பையும்,  அதைத் தொடர்ந்து வட இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அறிவித்திருந்தனர்.

    அதன்படி, இன்று சென்னையில் ஈசிஆர் ரோட்டில் அமைந்துள்ள பனையூரில் பூஜையுடன் தொடங்கியது. இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்காக ஏற்கெனவே, கிராமத்து பின்னணியுடன் கூடிய அரங்கு ஒன்றை அமைத்துள்ளனர். இந்த அரங்கில் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. விஜய் முறுக்கு மீசை கெட்டப்புடன் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

    இந்த அரங்கில் தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கதாநாயகிகள் இல்லாது விஜய் மற்றும் பிற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் மட்டுமே இங்கு படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இதை தயாரிக்கிறது.

    27 நடிகர்கள் இடம்பெறும் "Lets Go Party" பாடலின் ஒரு பதிப்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானால் வெளியிடப்பட்டது. இப்பாடல் படத்திலும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
    ரா.பார்த்திபனின் `கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்திற்கு பிறகு சாந்தணு தற்போது `முப்பரிமாணம்' படத்தில் நடித்து வருகிறார்.  சாந்தணு நடிப்பில் வெளியாகவுள்ள `முப்பரிமாணம்' படத்தில் இடம்பெற்ற "Lets Go Party" பாடல் நேற்று முன்தினம் வெளியானது.

    `சக்கரக்கட்டி' படத்தில் இடம்பெற்ற "டாக்ஸி டாக்ஸி" என்ற பாடலின் மூலம் சாந்தணுவுக்கு அடையாளம் அளித்த இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹமான் "Lets Go Party" பாடலை வெளியிட்டார்.

    மேலும் இப்பாடலில் ஜாக்கி ஷாரோப், பிரபு, பார்த்திபன், பாண்டியராஜன், விவேக், ரம்யா கிருஷ்ணன், ராதிகா, ஆர்யா, விஜய் ஆண்டனி,  சூரி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வித்தார்த், ஆரி, ப்ரித்திவி, கலையரசன், அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா ராஜேஷ், மோட்டை  ராஜேந்திரன், பிரசன்னா, கிருஷ், சங்கிதா, பாபி சிம்ஹா, பூர்ணிமா பாக்யராஜ், கே.பாக்யராஜ், கீர்த்தி உள்ளிட்ட 27 நடிகர்கள் என ஒரு  நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த பாடல் 3 நாட்களில் படமாக்கப்பட்டது.

    இரு மாதிரிகளாக படம்பிடிக்கப்பட்ட இப்பாடலின் ஒரு பதிப்பு தற்போது வெளியாகிவுள்ள நிலையில், இப்பாடலின் முழுவடிவம்  திரைப்படத்தில் இடம்பெறும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    "Lets Go Party" பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடன பயிற்சி அளித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் தயாராகி வரும்  நிலையில் ஒருபாடல் மட்டும் ரிலீசானது.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாகுபலி-2’ படம் வெளிவருவதற்கு முன்பே ரூ.500 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பாகுபலி’. சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக வெளிவந்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளிவந்த முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பட்ஜெட்டிலும், இன்னும் விறுவிறுப்பு கூட்டும் அளவுக்கும் படமாக்கி வருகிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி.

    இந்நிலையில், இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.500 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பாகுபலி-2’ படம் எங்கு, என்ன விலைக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்பது குறித்த விவரங்களை கீழே விரிவாக பார்ப்போம்.

    மேற்கு கோதாவரி - ரூ.8.5 கோடி
    கிழக்கு கோதாவரி - ரூ.9.5 கோடி
    நெல்லூர் - ரூ.5.6 கோடி
    குண்டூர் - ரூ.11.6 கோடி
    உத்தராந்திரா (விசாகப்பட்டினம் ) - ரூ.13.27 கோடி
    கிருஷ்ணா - ரூ.9 கோடி
    ராயலசீமா - ரூ.27 கோடி
    நிஷாம் ஏரியா - ரூ.50 கோடி
    தமிழ்நாடு விநியோக உரிமை - 27 கோடி
    கர்நாடகா - ரூ.45 கோடி
    கேரளா - ரூ. 10.5 கோடி
    இந்தி - ரூ.120 கோடி
    வட அமெரிக்கா (மட்டும்) - ரூ.45 கோடி
    வெளிநாடு - இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.

    சாட்டிலைட் உரிமம் வாயிலாக இப்படத்தின் வருமானம் கீழ் வருமாறு

    இந்தி - ரூ.51 கோடி + வரி
    தெலுங்கு - ரூ.26 கோடி
    தமிழ் - இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.
    மலையாளம் - இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.
    ஆடியோ உரிமம் - இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.

    இதுவரையில் பார்க்கும்போது ‘பாகுபலி-2’ ரூ.478 கோடியே 97 லட்சத்திற்கு வியாபாரம் ஆகியுள்ளது. இன்னும் சில ஏரியாக்களின் உரிமமும், சாட்டிலைட் உரிமமும் கணக்கில் எடுக்கப்படாமல் உள்ளது. அவையெல்லாம், வியாபாரம் ஆன பின்னால், இப்படம் ரீலீசுக்கு முன்பே ரூ.500 கோடியை தாண்டி வருமானத்தை பெறும் என்பது மட்டும் உண்மை. 
    ×