என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தார்.
    அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தார்.

    ஜெயசித்ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் காக்கிநாடா. ஆனால் ஜெயசித்ரா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். தந்தை மகேந்திரா. இவர் கால்நடை டாக்டராகவும், வக்கீலாகவும் இருந்தார். தாயார் ஜெயஸ்ரீ. ஜெயசித்ராவுக்கு பெற்றோர் வைத்த பெயர் லட்சுமி கிருஷ்ணவேணி ரோகினி பார்வதிதேவி என்பதாகும்!

    ஜெயசித்ராவின் தாயாரும் நடிகைதான். அந்த காலக்கட்டத்தில் ஜெயஸ்ரீ பிரபல நடிகையாக விளங்கினார். அவர் 1954-ம் ஆண்டு "ரோஜலு மாராயி'' (தெலுங்கு "காலம் மாறிப்போச்சு'') படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அன்னதாத்தா, டைகர்ராமுலு உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்தார்.

    1955-ம் ஆண்டு "மகாவீரபீமன்'' என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் திரவுபதியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின்னர் "தெய்வபலம்'', "சிவகாமி'' உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். மொத்தம் 40 படங்கள் வரை நடித்து இருக்கிறார்.

    திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு ஜெயஸ்ரீ திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். பின்னர் தனது குழந்தையான ஜெயசித்ராவை நன்றாக வளர்க்கவேண்டும், நிறையப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.

    இந்த நிலையில் 5 வயது குழந்தையாக இருந்தபோது "பக்தபோதனா'' என்ற தெலுங்கு படத்தில் நடிகை அஞ்சலி தேவிக்கு மகளாக ஜெயசித்ரா நடித்தார்.

    ஜெயசித்ரா படிக்கும் போதே நாட்டியமும் கற்று வந்தார். பரதநாட்டியத்தை முழுமையாக கற்றுக்கொண்டபின், ஜெயசித்ராவின் 11-வது வயதில் நாட்டிய அரங்கேற்றம் சென்னை வாணிமகாலில் நடந்தது. நடன அரங்கேற்றத்துக்கு சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.

    முழுக்க முழுக்க படிப்பிலேயே ஆர்வம் காட்டிவந்த ஜெயசித்ராவிற்கு நடிகையாகும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அவரோ சினிமாவில் நடிக்க சிறிதும் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.

    இந்த நிலையில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த ஜெயசித்ராவை விட்டலாச்சாரியா தனது படத்தில் நடிக்கவைக்க நினைத்தார். ஒரு தெலுங்கு படத்திற்கு நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க வைக்க "கேமரா டெஸ்ட்'' எடுத்தனர். ஆனால், உருவத்தில் குமரிப்பெண்ணாக இருந்தாலும், குரல் இன்னும் குழந்தைக் குரலாக இருக்கிறது என்று கூறி, "நீ இப்போது நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க முடியாது. பிறகு வாய்ப்புத் தருகிறேன்'' என்று கூறிவிட்டார், விட்டலாச்சாரியார்.

    திரைத்துறைக்கு வந்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    "நான் சென்னை வித்யோதயா பள்ளியில் 11-ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எனது தாயார் என்னை படிக்கவைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். நான் வழுவூர்ராமையா பிள்ளைமகன் சாம்ராஜிடம் பரதநாட்டியமும், சின்னசத்தியம் மாஸ்டர், எம்.எஸ்.சைவா ஆகியோரிடம் குச்சுப்புடி நடனமும் கற்றேன்.

    இந்தநிலையில்தான் விட்டலாச்சாரியாவின் பீதலபாட்லு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு அப்போது நடிக்க ஆர்வம் இல்லை. அந்த சமயத்தில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். படத்தில் நடிப்பதற்காக கேமரா டெஸ்ட் எடுத்தனர். நான் பேசும்போது தொண்டை கீச், கீச் என்றதால், "இன்னும் குழந்தைத்தனம் போகவில்லை, பிறகு வாய்ப்பு தருகிறேன்'' என்றார், விட்டலாச்சாரியார்.

    அதன்பின்னர் டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது அழைத்துச்சென்று, இரண்டு வசனங்களை பேசச்சொன்னார். நானும் பேசினேன். நான் பேசியதை கேட்டு சந்தோஷப்பட்ட டைரக்டர், "தமிழ்நாட்டிற்கு ஒரு சிறந்த கதாநாயகி கிடைத்துவிட்டார்'' என்று படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் அழைத்து மகிழ்ச்சி பொங்க கூறினார்.''

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.

    குறத்தி மகனில் நடிக்க ஒப்பந்தம் செய்தபோதுதான், "ஜெயசித்ரா'' என்ற பெயரை கோபாலகிருஷ்ணன் சூட்டினார்.

    இந்தப்படத்தில், குறவர் இனத்தைச் சேர்ந்த இளைஞனை பணக்காரரின் மகளான ஜெயசித்ரா விரும்புவார். இந்தக் காதலை தந்தை ஏற்காததால், ஜெயசித்ரா குறத்தி வேடம் போட்டுக்கொண்டு காதலனுடன் சென்றுவிடுவார்.

    இப்படத்தில் ஜெயசித்ரா துருதுருவென்று நடித்து, ரசிகர்களிடம் `சபாஷ்' பெற்றார்.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடிப்பில் உருவாகி இருக்கும் `பாகுபலி 2' அதிக பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. சாதனை குறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    2017-ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான `பாகுபலி 2' குறித்து ஒவ்வொரு நாளும் ஸ்வாரஸ்ய தகவல்கள் வந்து  கொண்டே இருகின்றன. அந்த வகையில் பாகுபலி படமும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. எஸ்.எஸ். ராஜமவுலி  இயக்கத்தில் உருவான `பாகுபலி'  படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகியுள்ள `பாகுபலி 2' வரும் ஏப்ரல் 28-ஆம் ரசிகர்களுக்கு  விருந்தளிக்க உள்ளது.

    பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில்  வெளியாகிய இப்படத்தின் டிரெய்லர் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.  மேலும் இந்தியாவில் அதிகம்  பார்க்கப்பட்ட மற்றும் அதிகம் விரும்பப்பட்ட படத்தின் டிரெய்லர் என்ற சாதனையைும் நிகழ்த்தி உள்ளது.



    தெலுங்கில் மட்டும் இதுவரை 35 லட்சம் பார்வையாளர்களும், இந்தியில் 30 லட்சம் பார்வையார்களும், தமிழில் 6 லட்சம் பேரும்,  மலையாளத்தில் 1 லட்சம் பேரும் டிரெய்லரை கண்டுகளித்துள்ளனர். இந்தியில் டப்பிங் செய்யப்படும் ஒரு படம் அதிக  பார்வையாளர்களை பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    ரிலீசுக்கு முன்பே வணிக ரீதியிலும் பாகுபலி 2 சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் தமிழக திரையரங்கு  உரிமையை கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜாராஜன் வாங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4  மொழிகளில் சுமார் 6,500 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்க உள்ளது.



    தென்னிந்திய மொழித் திரைப்படம் ஒன்று ஐமேக்ஸ் வீடியோ வடிவில் வருவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
    எத்தனை வெற்றி கொடுத்தாலும் விஜய்சேதுபதி பணிவுடனே இருப்பவர் என்று இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள படம் ‘கவண்’. ஹிப்ஹாப் தமிழா ஆதி  இசை அமைத்துள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.

    இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய டி.ராஜேந்தர்....

    ‘கவண்’ படத்தில் நான் நடிக்க காரணம் கே.வி.ஆனந்த் தான். அவர் எனக்கு மிகவும் பிடித்தமான கேமரா மேன். ஒளிப்பதிவில் தனி  முத்திரை பதித்தவர், ஒரே நிறுவனத்துக்கு 3 படம் எடுக்கும் அளவு தயாரிப்பாளர் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.



    கதை தான் எனது ஹீரோ. நடிக்கும் ஹீரோ அடுத்தது என்று சொல்வது கே.வி.ஆனந்தின் தன்நம்பிக்கை. என்னை தேடி வந்து கதை  சொன்னார். நான் தயங்கினேன். வெளியே யாருடைய படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறினேன்.

    உங்கள் மரியாதை கெடாமல் உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பேன். என் மீது நம்பிக்கை இருந்தால் நடியுங்கள் என்றார். அந்த  வார்த்தை எனக்கு மிகவும் பிடித்தது. நான் பல படங்கள் தயாரித்திருக்கிறேன். ஆனால் ஏ.வி.எம். அழைத்தும் அவர்களுக்கு நான் ஒரு  படம் பண்ணியது இல்லை. இதில் நடித்தேன்.



    ஒரு படத்தில் நடித்தாலே தலையை தூக்கிக்கிட்டு போகிற காலத்திலே, எத்தனை வெற்றி கொடுத்தாலும் பணிவுடன் இருக்கக்கூடிய  நடிகர் விஜய்சேதுபதி.

    அவருடன் நடிக்கும் போது எனக்கு மிகவும் சவுகரியமாக இருந்தது. கோடியுள்ள மனிதனை மதிக்கிறவன் இல்லை இந்ததாடி. லட்சம்  கோடி இருந்தாலும் நான் பேசுறதை தான் பேசுவேன். அது தான் என் சுவாபம்” என்றார்.

    நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி,கே.வி.ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
    கவர்ச்சி நாயகி பட்டியலில் தான் சேரமாட்டேன் என்று நடிகை ராகுல் பிரீத்சிங் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த முழுபேட்டியை கீழே பார்ப்போம்.
    ‘தடையறதாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய தமிழ்படங்களில் நடித்தவர் ராகுல் பிரீத்சிங். எதிர்பார்த்தபடி வாய்ப்புகள்  வராததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு முன்னணி நடிகையானார். இப்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கிறார். இந்தி பட  வாய்ப்பும் வந்திருக்கிறது.

    தற்போது கவர்ச்சி வேடங்களில் நடிப்பதற்கு ராகுல் பிரீத்சிங் மறுத்து வருகிறார். இதுபற்றி கூறிய அவர்...



    “ஆரம்பத்தில் படங்களில் நான் கவர்ச்சியாக நடித்தது உண்மைதான். அப்போது எனக்கு நடிப்பில் சரியான புரிதல் இல்லை.  எப்படியாவது மார்க்கெட் பிடிக்க வேண்டும் என்று நினைத்ததால் அப்படி நடித்தேன். இப்போது முன்னணி நடிகையாகி  இருக்கிறேன்.

    இனி உடம்பை காட்டி நடித்துதான் இந்த இடத்தை தக்கவைக்க வேண்டும் என்ற நிலை இல்லை. எனவே, நடிப்பு திறமையை காட்டும்  நடிகையாக இருக்கவே விரும்புகிறேன். அந்த கோணத்தில்தான் இப்போது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். அதிக  பணத்துக்கு ஆசைப்பட்டு கவர்ச்சி கதாநாயகி பட்டியலில் ஒருபோதும் நான் சேர மாட்டேன்” என்றார்.
    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால், தயாரிப்பாளர்களின் செலவை குறைக்க உதவுவாரா என்று தயாரிப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளபர். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்போம்.
    தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் சூடுபிடித்துள்ளது. தலைவர் பதவிக்கு விஷால் களம் இறங்கியுள்ளார்.

    இது குறித்து பல படங்களை தயாரித்தவரும், தியேட்டர் அதிபரும் வினியோகஸ்தருமான கண்ணப்பன் அளித்த பேட்டி...

    ‘‘ஆந்திராவில் ஒரு படத்தின் சம்பளத்தை பெரிய ஹீரோக்கள் மொத்தமாக வாங்குவது இல்லை. சில ஹீரோக்கள் சம்பளத்துக்கு  பதில் ஏரியா வாங்கிக் கொள்கிறார்கள். சிலர் சிறிது, சிறிதாக வாங்கிக் கொள்கிறார்கள். இந்த நடைமுறை தமிழ் சினிமாவில் வர  விஷால் உறுதிமொழி கொடுப்பாரா?



    பெரும்பாலான நடிகர்கள் வெளியூர் படப்பிடிப்பில் தங்கள் காருக்கு பெட்ரோல் கேட்கிறார்கள். நடிகர்கள் தயாரிப்பாளர் செலவில்  தான் சாப்பிடுகிறார்கள். தங்கள் உதவியாளர்கள், மேக்கப், ஹேர்டிரசருக்கு கூட பேட்டா கொடுக்க தயாரிப்பாளர்களிடம் பணம்  வாங்குகிறார்கள்.

    கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் அதை கூட கொடுக்கக்கூடாதா? பைக்கில் சென்று ஓட்டு வேட்டை நடத்துகிறார் விஷால்.  படப்பிடிப்புக்கும் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு வந்தால் எவ்வளவு செலவு மிச்சம். நடிகர்களில் நாசர் ஆட்டோவிலே படப்பிடிப்பு  தளம் வருவார். நடிகர் சத்யராஜ் கேரவன் கேட்கமாட்டார். சம்பளத்தை மிரட்டி வாங்க மாட்டார்.



    அந்த மாதிரி மற்ற நடிகர்களும் மாற விஷால் நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுதிமொழி கொடுக்க வேண்டும். அப்படி செய்தால்  நானே அவருக்காக பிரசாரம் செய்வேன். தியேட்டர்களில் வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமே ஓரளவு கூட்டம் வருகிறது. மற்ற நாட்களில்  100-க்கும் குறைவான ஆட்களே படம் பார்க்க வருகிறார்கள். அப்படி இருக்க ஹீரோக்கள் எதுக்காக இவ்வளவு பில்டப்  கொடுக்கிறார்கள் என்றார்.
    ராமு செல்லப்பா இயக்கத்தில் நட்ராஜ், ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் நடிப்பில் உருவாகி உள்ள `எங்கிட்ட மோதாதே' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    1988-ல் நடக்கும் கதையில் படத்தின் நாயகர்கள் நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பர்கள். கட்அவுட்டுக்கு ஓவியம் வரையும்  தொழில் செய்து வருகிறார்கள். பின்னர் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் நட்ராஜ், ராஜாஜியையும்  தன்னுடன் அழைத்து வருகிறார். பின்னர் தனது அம்மா மற்றும் தங்கை சஞ்சிதா ஷெட்டியையும் திருநெல்வேலி அழைத்து  வருகிறார். பின்னர் நட்ராஜ் மற்றும் ராஜாஜி அங்கேயே சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்கின்றனர்.

    இதில் நட்ராஜ் தீவிர ரஜினி ரசிகராக ரஜினி படங்களை கட்அவுட்களில் வரைந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ராஜாஜி  கமல் ரசிகராக கமல் படங்களை வரைய விரும்புகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் மாவட்ட ரசிகர் மன்றங்களில் உறுப்பினர்களாக  இணைகின்றனர்.



    அதேநேரத்தில் கமல் ரசிகரான ராஜாஜிக்கு, பார்வதி நாயரை பார்த்த உடனே காதல் வருகிறது. மறுபுறத்தில் நட்ராஜ் -  சஞ்சிதாவை காதல் செய்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் ராஜாஜிக்கு தெரியவர நட்ராஜை விட்டு பிரிந்து தனியாக தொழில்  செய்ய ஆரம்பிக்கிறார்.

    இதற்கிடையே ரஜினி, கமல் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீசாகிறது. இதில் கட்அவுட் வைப்பத்தில் ஏற்படும் பிரச்சனையில்   திரையரங்கு தாக்கப்படுகிறது. இதனால் கடுப்பாகும் தியேட்டர் உரிமையாளரும், அரசியல்வாதியுமான ராதாரவி கட்அவுட்  வைத்தால் படங்களை ரிலீஸ் செய்ய முடியாது என்கிறார்.

    பின்னர் அரசியல் பிரச்சனையாக மாறும் இந்த பிரச்சனையை தீர்த்து படத்தை ரிலீஸ் செய்ய ரஜினி-கமல் ரசிகர்கள் முடிவு செய்து,  அதற்காக போராடி வருகின்றனர். இதில் நட்டி, ராஜாஜியை கொல்ல ஆட்களை ஏவிவிடுகிறார் ராதாரவி. இந்த பிரச்சனைகளில்  இருந்து நட்டி, ராஜாஜி எப்படி தப்பித்தார்கள், ரஜினி-கமல் படங்களை எப்படி திரையிட்டார்கள், ராதாரவி சூழ்ச்சியில் இருந்து  தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    இப்படத்தில் நட்ராஜ், ரஜினி ரசிகராகவே வாழ்ந்திருக்கிறார். அவரது ஒவ்வொரு வசனங்களும், ரஜினியை பின்பற்றும் அவரது  உடல்அசைவுகளும் பார்ப்பதற்கு ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக சிகரெட்டை தூக்கி போடுவது, நடை, உடை என ரஜினி ஸ்டைலில்  அசத்துகிறார். குறிப்பாக தனது தலைவர் படத்தை ரிலீஸ் செய்ய அவர் செய்யும் முயற்சிகள் ரசிக்கும்படி உள்ளது. நட்ராஜுடன் வரும்  நபர் படத்தில் காமெடியில் சிரிக்க வைக்கிறார்.

    இதற்கு முன்பு நடித்த படங்களை விட இப்படத்தில் ராஜாஜியின் நடிப்பும், அவரது செயல்களும் பார்க்கும்படி உள்ளது. கமல் ரசிகராக  மிரட்டியிருக்கிறார். காதல் காட்சிகளிலும் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.

    இப்படத்தில் ராதாரவி ஒரு மிடுக்கான தோற்றத்தில் நடித்துள்ளார். பயந்த சுபாவமாக வரும் இவர் தனது அடியாளின் மூலம் தான்  நினைப்பதை செய்து முடிப்பதில் நின்றுள்ளார். குறிப்பாக அரசியல்வாதிக்கு ஏற்ற சாதுர்யங்களும், சூழ்நிலைக்கு தகுந்தபடி நடந்து  கொள்வதிலும் தனது நடிப்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.



    ராதாரவி சொல்வதை செய்து முடிக்கும் விஜய் முருகன் அவரது தோற்றத்திற்கு ஏற்ப அருமையான நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கிறார். படம் முழுக்க வில்லனாக வலம் வந்து மிரட்டி உள்ளார். சஞ்சிதாவின் நடிப்பை பொறுத்தவரையில் தனக்குரிய  பாணியில் சிறப்பாக நடித்துள்ளார். காதல் காட்சிகளில் உருகி தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல்முறையாக  இப்படத்தில் தாவணியில் வரும் பார்வதி நாயர் அவருக்கே உரித்தான ஸ்டைலில் நடித்திருக்கிறார். தாவணி கெட்அப் மட்டும்  அவருக்கு சரியாக அமையவில்லை. மற்றபடி காதல் காட்சிகளில் ரசிக்கும்படி இருந்தது.

    இயக்குநர் ராமு செல்லப்பா படத்தின் திரைக்கதையை சிறப்பாக அமைத்துள்ளார். 1980 களில் நடக்கும் கதையை அதற்கேற்ற  பாணியில் சிறப்பாக கையாண்டுள்ளார். படத்தின் வசனங்களும் ரசிக்கும்படி உள்ளது. படத்தில் ரஜினி, கமல் ரசிகர்கள் வரும்  காட்சிகளும், படத்தை ரிலீஸ் செய்ய போராடும் காட்சிகளும் அந்த காலத்திற்கே கொண்டு செல்கிறது.

    இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்தது சிறப்பு.

    மொத்தத்தில் என்கிட்ட மோதாதே, மிரட்டல்.
    புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘அட்டு’ படத்தின் ரிலீஸ் தேதிய படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    அறிமுக இயக்குனர் ரத்தன் லிங்கா இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘அட்டு’. இப்படத்தில் ரிஷி ரித்திக், அர்ச்சனா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் ஐகான பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அன்பழகன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ உரிமையை ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

    வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை அருமையாக படம்பிடித்துள்ள ‘அட்டு’ படம் வருகிற மார்ச் 31-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அனைத்துவிதமான ரசிகர்களையும் கவரும்படியும், விறுவிறுப்பாகவும் இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.



    இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர், டிரைலர்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ‘அட்டு’ படத்திற்கு ‘போபோ’ சசி இசையமைத்துள்ளார். இவர் ‘குளிர் 100’ என்ற படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    எடிட்டர் ஆண்டனியை தொடர்ந்து மற்றொரு எடிட்டர் ஒருவர் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார். அவர் யார் என்பதை கீழே பார்ப்போம்.
    ஒரு சிறந்த எடிட்டரால் தரமான படத்தை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை சினிமா உலகில் உள்ளது. மேலும் ஒரு படத்தின்  இயக்குனருக்கு வலது கையே அப்படத்தின் எடிட்டர் தான். அப்படி புது யுக்தியுடன் இயக்குனராக களமிறங்க இருக்கிறார் எடிட்டர்  டான் போஸ்கோ.

    ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் டான் போஸ்கோ. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார்  நடிப்பில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இப்படத்தின் எடிட்டிங், சினிமா  துறையினரால் அதிகம் கவரப்பட்டது.



    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக  பணியாற்றியுள்ளார். இன்னும் இவரது எடிட்டிங்கில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’,  உள்ளிட்ட பல படங்கள் வெளியாக தயாராக இருக்கும் நிலையில், தற்போது இவர் புதிய படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக  இருக்கிறார்.

    இவர் இயக்கவிருக்கும் புதிய படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. எடிட்டராக பலரின் கவனத்தை ஈர்த்த  டான் போஸ்கோ, தற்போது இயக்குனராக மேலும் பலரின் கவனத்தையும் ஈர்க்க இருக்கிறார். விரைவில் இப்படம் பற்றிய  முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கின்றனர்.



    இதுகுறித்து டான் போஸ்கோ கூறும்போது, நான் முதலில் ‘உதவி’ என்ற குறும்படத்தை இயக்கினேன். அதுதான் எனக்கு சிறந்த  புத்துணர்ச்சியை கொடுத்தது. யாரிடமும் உதவி எடிட்டராக பணியாற்றாமல் எடிட்டிங் கற்றுக் கொண்டு சினிமா உலகில்  அடியெடுத்து வைத்தேன். எனக்கு எடிட்டர் என்ற அடையாளம் கொடுத்தது ‘சுந்தரபாண்டியன்’ படம். முதல் படமே பெயர் சொல்லும்  அளவிற்கு அமைந்தது சந்தோஷம். ஆனால், பல படங்களுக்கு எடிட்டிங் செய்து வந்ததால் படம் இயக்க முடியவில்லை. அதுபோல்,  யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல், தற்போது முழுவீச்சில் படம் இயக்கும் எண்ணத்தில் களம் இறங்கி இருக்கிறேன்.  இந்த புதிய படத்திற்கு சிறந்த இயக்குனர் என்ற அடையாளம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
    ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.
    தமிழீழ படுகொலைக்காக நடத்தப்பட்ட ஐ.நா.வின் 34வது மனித உரிமை ஆணைய கூட்டத்தொடரின் இறுதி அமர்வில், அமெரிக்கா  மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளால் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலநீட்டிப்பு தரும் தீர்மானம் கொண்டு  வரப்பட்டடுள்ளது.

    இலங்கை அரசு தாங்கள் போர்குற்ற உள்நாட்டு விசாரணை நடத்துவோம் என்று கூறுவது வெறும் கண்துடைப்பு செயலாகும்.  “உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு” பாலியல் வதைமுகாம்களில் தமிழ் பெண்களை அடைத்து வைத்து இலங்கை  ராணுவம் சித்ரவதை செய்த உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது.



    கிட்டத்தட்ட 55 முகாம்கள் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 47 ராஜபக்சே காலத்திலும், 8 சிரிசேன காலத்திலும்  நடத்தப்பட்டுள்ளது என்றும் இலங்கை ராணுவம் திட்டமிட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த அமைப்பின்  தலைமை அதிகாரியான “ யாஸ்மின் சூகா” கூறியுள்ளார். இது அனைத்தையும் எடுத்துரைத்தும் மேலும் இரண்டு ஆண்டு  காலநீட்டிப்பு தந்துள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    தமிழர்களாகிய நாங்கள் “மூன்றரை லட்சம்“ உறவுகளை இழந்து நிற்கிறோம், மேலும் இரண்டு ஆண்டுகள் கால நீட்டிப்பு தந்துள்ளது  மன வேதனை அளிக்கும் செய்தி.



    இளைஞர்களும் மாணவர்களும் ஒரு முடிவு எடுத்து நீதியை தாங்களாகவே வென்றெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் . இது  நடக்காமல் இருக்க , உலக நாடுகள் இணைந்து தங்கள் கடமையை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமியிடம் நாங்கள் பலமுறை நேரில் சென்று சட்டசபையில் இந்தியாவிற்கு அழுத்தம் தருகின்ற ஒரு தீர்மானம் நிறைவேற்ற  வலியுறுத்தினோம்.

    ஆனால் அவர் எந்த ஒரு தீர்மானத்தையும் இதுவரை நிறைவேற்றாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஈழம் தொடர்பாக வரலாற்று  சிறப்புமிக்க தீர்மானங்களை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றி தமிழர்களுக்கு உறுதுணையாக  இருந்தார்.

    அவரை பின்பற்றுபவர்கள் மவுனம் காத்தது, ஜெயலலிதா அம்மையாருக்கு செய்யும் மாபெரும் துரோகம் ஆகும். உலகமெங்கும்  வாழும் தமிழ் இளைஞர்களும் மாணவர்களும் எப்படி எங்கள் கலாச்சார ஜல்லிக்கட்டை வென்றெடுக்க ஒரு அறவழி போராட்டம்  நடத்தி வென்றார்களோ, அதுபோல் எம் தமிழ் ஈழ உறவுகளுக்கு நீதியை பெற்று தர ஒரு அறவழி போராட்டத்தை முன் எடுக்க  வேண்டும் என்று உரிமையோடு இந்த ஐ.நா மன்றத்தில் இருந்து கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து நடிகர் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்திரில் 2 வாரங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாய  கடனை வசூலிக்க வங்கிகள் விவசாயிகளிடம் கெடுபிடி நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும், வறட்சி நிவாரணம், காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

    ஆனால் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. போராடும் விவசாயிகளை துணை  சபாநாயகர் தம்பித்துரை, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் சிலநாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார்கள். மத்திய மந்திரிகளை  விவசாயிகள் சந்தித்து பேச ஏற்பாடு செய்தனர்.



    ஆனாலும் விவசாயிகள் பிரச்சினைக்கு உடனடியாக எந்த தீர்வும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் வறட்சி நிவாரணமாக  தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.36 ஆயிரம் கோடி கேட்டது. இதற்கு மத்திய அரசு ரூ.2096 கோடியே தருவதாக அறிவித்து  இருப்பதுடன் அதில் ரூ.1,748 கோடியே ஒதுக்கி உள்ளது.

    இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். யானைப் பசிக்கு சோளப்பொறி போட்டது போல்  இருக்கிறது என்று வேதனையுடன் கூறினார் கள்.

    இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் பற்றி கேள்விப்பட்ட நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், ரமணா, இயக்குனர் பாண்டியராஜ்  ஆகியோர் இன்று டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய அரசின்  கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுவோம் என்று அவர்களிடம் தெரிவித்தனர்.



    பின்னர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக விவசாயிகள் போராட்டம் கவலை அளிக்கிறது. அவர்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க முன்வராதது வேதனை  அளிப்பதாக உள்ளது. விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை நகைளையும், பொருட்களையும் விற்று அடைத்துள்ளனர். சிலர் தாலி  செயினையும் விற்று இருப்பதை அறிந்து வேதனையாக இருக்கிறது.

    நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் கடன்களை மட்டுமே அடைக்க முடியும். ஆனால் ஒட்டுமொத்த கடன்களை அடைக்க மத்திய அரசால்  மட்டுமே முடியும். எனவே விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று உடனே தீர்த்து வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ‘டோரா’ படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் 28-ந் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகை நயன்தாரா, நடிகர் தம்பிராமையா நடித்துள்ள ‘டோரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின்  கதை, திரைக்கதை தனக்கு சொந்தமானது எனக் கூறி சினிமா இணை இயக்குனர் நாடிமுத்து என்பவர் சென்னை சிட்டி சிவில்  நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘2013ம் ஆண்டு ‘நீயும் நானும்’ என்ற தலைப்பில் கதை, திரைக்கதை  எழுதியிருந்தேன்.

    அதை படமாக எடுப்ப தாகக் கூறிய தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக், என் கதையை வாங்கி படித்து விட்டு மறுநாள் திருப்பித் தந்தார்.  பின்னர், என் கதையின் தலைப்பை மட்டும் மாற்றி விட்டு, ‘டோரா’ என்ற பெயரில் என் கதையை திரைப்படமாக தயாரித்துள்ளார்.  இந்த படத்தை வெளியிட அனுமதித்தால் அது எனக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், படத்தை வெளியிட தடை விதிக்க  வேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இந்த மனு 16-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சாந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மார்ச் 24ந்  தேதி (இன்று) தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டு  இருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் சார்பில் வக்கீல்  சுரானா ஆஜரானார். அதேபோல மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆனந்தன் ஆஜரானார்.



    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சாந்தி, இந்த வழக்கிற்கு எதிர்மனுதாரர் நேமிசந்த் ஜபக் பதில் மனுவை வருகிற 28ந்  தேதி (செவ்வாய்கிழமை) தாக்கல் செய்யவேண்டும் என்று அன்று இந்த வழக் கின் இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி  உத்தரவிட்டார்.
    இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள `தாயம்' படத்தின் விமர்சனத்தை கீழே பார்போம்.
    ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வேலைக்கான நேர்முக தேர்வு நடக்கிறது. இதில், நாயகன், நாயகி உள்பட 8  பேர் வருகிறார்கள். அவர்களை ஜெயக்குமார் ஒரு அறையில் அடைத்து வைக்கிறார். அந்த அறைக்குள் அவர்கள் 1 மணி நேரம்  இருக்க வேண்டும் என்றும், 1 மணி நேரத்திற்கு பிறகு யார் உயிரோடு இருக்கிறார்களோ, அவர்கள்தான் இந்த கம்பெனிக்கு தலைமை  அதிகாரி என்றும் கூறிவிட்டு, அறைக் கதவை அடைத்துவிட்டு செல்கிறார்.

    அந்த அறைக்குள் சென்றவுடன் 8 பேருக்கும் தான் யார் என்பதும், தன்னுடைய பின்புலம் என்னவென்பதும் மறந்துவிடுகிறது.  ஆனால், நம்மில் யாரோ ஒருவர் மட்டும்தான் வெளியே செல்ல முடியும் என்பதுமட்டும்தான் தெரிகிறது. அப்படியிருக்கையில், அந்த  அறைக்குள் இருந்து யார் உயிரோடு வெளியே வந்தார். அந்த அறைக்குள் அவர்களுக்குள் நடந்தது என்ன? என்பதை சஸ்பென்ஸோடு  சொல்லும் கதையே தாயம்.



    8 பேரை கொன்றால்தான் அந்த வேலை கிடைக்குமா? அப்படியென்ன அந்த பதவிக்கு மவுசு இருக்கிறது? என்பன போன்ற  கேள்விகளுக்கு கிளைமாக்சில் பதில் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும், கிளைமாக்சில் 7 பேரை கொன்றுவிட்டு, ஒருவர்  வெளியே வருவது போலவும் காட்டியிருக்கிறார்கள்.

    ஆங்கில படங்களில் இதுபோன்ற படங்கள் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளன. அதேநேரத்தில் ரசிக்கவும் வைத்துள்ளனர். அதைபோல்  இந்த படத்தையும் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி. இதற்காக, எண்டர்டெயின்மெண்டே  இல்லாமல் திரில்லிங்காக கொண்டு போயிருந்தாலும், அதை ரசிக்கும்படியாக எடுக்க தவறியிருக்கிறார்.



    படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காட்டுவதுபோல், அவர்களுக்கென்று தனித்தனி குணாதிசயங்கள்  கொடுத்திருந்தாலும், காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாக இல்லை. கடைசியில், அவர்கள் அறைக்குள் அடைக்கப்பட்டது  மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைதான் என்று சொல்லி முடித்திருக்கிறார். ஆனால், அதை  சுவாரஸ்யமாக கொடுக்க தவறியிருக்கிறார். இதனால், படத்தை பார்க்கும் நமக்கும் சிகிச்சை அளிக்கவேண்டிய நிலைமை  ஏற்பட்டிருக்கிறது.

    ஒரு அறைக்குள்ளே நடக்கக்கூடிய சம்பவத்தை, ரொம்பவும் நேர்த்தியாக கையாண்டிருக்கவேண்டும். அதை அவர், பொறுப்புடன்  கையாளவில்லை என்றே தோன்றுகிறது. படத்தின் கதை சுவாரஸ்யம் இல்லாமல் நகர்வதால், படத்தின் இசையும் பெரிதாக  ரசிக்கும்படி இல்லை. மற்றபடி ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘தாயம்’ காயம்.
    ×