தொழில்நுட்பம்
சாம்சங் கியர் S3 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
சாம்சங் நிறுவனத்தின் கியர் S3 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாதனம் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெர்லினில் நடைபெற்ற IFA விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கியர் S3 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனங்கள் ஃபிரான்டியர் மற்றும் கிளாசிக் என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் இரண்டு கியர் S3 ஸ்மார்ட்வாட்ச்களும் ரூ.28,500 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ஜனவரி 18 ஆம் தேதி முதல் துவங்கும் என்றும் நாடு முழுக்க இயங்கி வரும் அதிகாரப்பூர்வ விற்பனை நிலையங்களில் இவை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கியர் S3 சிறப்பம்சங்களை பொருத்த வரை 1.3 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் வளையும் பெஸல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் ஃபுல்-கலர் 'ஆல்வேஸ் ஆன்' டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இத்துடன் டூயல்-கோர் 1.0 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 768 எம்பி ரேம், மற்றும் கியர் S2 ஸ்மார்ட்வாட்ச்-இல் வழங்கப்பட்ட 4GB அளவு இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் IP68 சான்று பெற்றுள்ளது. இதனால் தூசு மற்றும் நீர் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் இதய துடிப்பை டிராக் செய்யும் சென்சார் மற்றும் வை-பை, ப்ளூடூத், என்எஃப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 380 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது கியர் ஸ்மார்ட்வாட்ச்கள் ஐஓஎஸ் இயங்குதளத்துடன் இயங்கும் செயலிகளை அறிமுகம் செய்தது. அதன் படி கியர் S2, கியர் S3 மற்றும் கியர் ஃபிட் 2 உள்ளிட்ட சாதனங்களுக்கு ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்துடன் இணைந்து இயங்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.