தொழில்நுட்பம்
விற்பனைக்கு தயாராகும் நோக்கியா டேப்லெட்: புது தகவல்கள்
நோக்கியா ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து டேப்லெட் சாதனங்களும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகின்றது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்தது. இந்நிலையில் நோக்கியா P1 ஸ்மார்ட்போன் மற்றும் சில சாதனங்களை நோக்கியா அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் பெயரிடப்படாத நோக்கியா டேப்லெட் தயாராகி வருவது தெரியவந்துள்ளது. இதில் புதிய டேப்லெட் சாதனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா டேப்லெட் சாதனத்தை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகின்றது.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய நோக்கியா டேப்லெட் 18.4 இன்ச் குவாட் எச்டி 2560x1440 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மெமரியை பொருத்த வரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம். மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியை வழங்குவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா 4K பதிவு செய்யும் வசதி, ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.