வழிபாடு

கந்தசஷ்டி திருவிழாவில் நேற்று இரவு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியுலா வந்த காட்சி.

திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா- சுவாமி ஜெயந்திநாதர் தங்க தேரில் கிரி வீதி உலா

Published On 2025-10-24 10:58 IST   |   Update On 2025-10-24 10:58:00 IST
  • 3-ம் நாள் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.
  • விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று இரவு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரிவீதியுலா வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்

3-ம் நாள் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை தொடங்கியது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.

பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேளதாளம் முழங்க சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின் சுவாமி, அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவிலை சேர்கிறார்.

6-ம் திருவிழாவான 27-ந் தேதி (திங்கள்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனைக்குப் பிறகு சுவாமி, அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள். அங்கு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

7-ம் திருவிழாவான 28-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) இரவு 11மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News