புதுச்சேரி

திருபுவனையில் மேம்பால நுழைவு வாயில் பகுதியில் குறுகிய சாலையில் செல்லும் வாகனங்கள்.

திருபுவனையில் குறுகிய சாலையால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-07-13 09:19 GMT   |   Update On 2022-07-13 09:19 GMT
  • புதுவை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.
  • திருவாண்டார் கோவில் பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து அதில் வாகனங்கள் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 4 வழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

திருவாண்டார் கோவில் பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து அதில் வாகனங்கள் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. தற்போது திருபுவனை வழியாக கடலூர் செல்லும் முக்கிய சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், புதுவையில் இருந்து வருகின்ற வாகனங்கள் கடலூர் சாலை வழியாக திரும்ப முடியாமல் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்கின்றன.

மேலும் புதுவையில் இருந்து வரும் வாகனங்கள் அந்த வழியாக விழுப்புரம் செல்ல முடியாமல் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன. மேம்பாலம் அருகில் குறுகிய சாலை பகுதியில் சினிமா தியேட்டர், வணிககடைகள், ஓட்டல்கள் மிக நெருக்கமாக அமைந்த கட்டிடங்கள் இருப்பதால், குறுகிய சாலை வழியாக தற்போது வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு சாலையினை அகலப்படுத்தி வாகனங்கள் சென்றுவர வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் இவ்வழியாக பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்வதற்கு இடையூறாக இந்த பகுதி இருப்பதால், நேரத்திற்கு வேலைக்கு செல்வோரின் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

திருபுவனை பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மிகப்பெரிய லாரிகள் மற்றும் வாகனங்கள் இந்த பகுதியில் திரும்ப முடியாமல் திணறி வருகின்றன.

சாலையின் இரு புறமும் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறாக இப்பகுதி விளங்கி வருகின்றது. திருபுவனை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தினை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News