கோப்பு படம்.
புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தகவர்னர் திறமையை காட்ட வேண்டும்-முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
- எங்கள் திறமையை தமிழக மக்கள் கண்டு கொள்ளவில்லை, மத்திய அரசு அங்கீகரித்து கவர்னர் பதவி வழங்கியுள்ளது என கவர்னர் தமிழிசை கூறியுள்ளது முரண்பாடான தேவையற்ற கருத்து.
- கட்சிக்காரருக்கு ஒரு அங்கீகாரம் அளிக்க வேண்டுமே என்ற காரணத்துக்காகத்தான் கவர்னர் பதவி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எங்கள் திறமையை தமிழக மக்கள் கண்டு கொள்ளவில்லை, மத்திய அரசு அங்கீகரித்து கவர்னர் பதவி வழங்கியுள்ளது என கவர்னர் தமிழிசை கூறியுள்ளது முரண்பாடான தேவையற்ற கருத்து.
பொறுப்பு கவர்னர் தமிழிசை தமிழகத்தில் 2 சட்டமன்ற தேர்தல்களிலும், 2 எம்.பி. தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
இவரின் திறமையின் அடிப்படையில்தான் மத்திய அரசு கவர்னர் பதவியை அளித்துள்ளது என்று கூறுவது சரியல்ல. கட்சிக்காரருக்கு ஒரு அங்கீகாரம் அளிக்க வேண்டுமே என்ற காரணத்துக்காகத்தான் கவர்னர் பதவி அளிக்கப்பட்டது.
மத்திய அரசு நியமனத்தை திறமையின் அடிப்படையில் நியமிப்பதாக தெரிய வில்லை. திறமையை பற்றி ஆதங்கம் கொள்ளும் கவர்னர் புதுவையில் திறமைக்கு மதிப்பு கொடுக்கிறாரா?
நியமன உறுப்பினர் பதவிக்கோ, பத்ம விருதுக்கோ, திட்டக்குழுவுக்கோ புதுவையைச் சார்ந்த எல்லா வகையிலும் தகுதி மற்றும் திறமை உள்ளவரை இவர் மதிக்கவில்லை.இவருக்கு உண்மையில் திறமை இருந்தால், புதுவையின் சொத்தான மின் துறையை காப்பதிலும், 5 ராட்சத மதுபான ஆலைகள், மதுக்கடைகள் திறப்பதை தடுப்பதிலும், ரேஷன் கடைகளை திறப்பதிலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதிலும் காட்டி இருக்க வேண்டும்.
எனவே இல்லாத திறமையைப் பற்றியும் மதிக்கப்படாத திறமையைப் பற்றியும் ஆதங்கப்படாமல் புதுவையின் உண்மையான ஊழல் அற்ற வளர்ச்சிக்கு பாடுபடுங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.