- நைனார் மண்டபத்தில் மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- இந்த நிலையில் குமார் சம்பள பணத்தை தனது மனைவி ஜெயாவிடம் கொடுத்தார். அப்போது பணம் குறைவாக இருப்பதாக அவரது மனைவி தெரிவித்தார்.
புதுச்சேரி:
நைனார் மண்டபத்தில் மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுவை நைனார் மண்டபம் சுதானா நகர் கலைமகள் வீதியை சேர்ந்தவர் குமார். இவர் மேட்டுப்பாளையம்-பூத்துறை செல்லும் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
வேலை நேரங்களிலும் இவர் மது குடித்துவிட்டு பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குமார் சம்பள பணத்தை தனது மனைவி ஜெயாவிடம் கொடுத்தார். அப்போது பணம் குறைவாக இருப்பதாக அவரது மனைவி தெரிவித்தார்.
சந்தேகமடைந்து குமார் வேலை பார்க்கும் உரிமையாளரிடம் ஜெயா போன் செய்து கேட்டார். அப்போது உரிமையாளர் உனது கணவர் எப்போதும் மது குடித்து விட்டு வேலைக்கு வருகிறார். இனிமேல் அதுபோல் குடித்து விட்டு வேலைக்கு வந்தால் வேலையில் இருந்து நீக்கி விடுவேன் என்று எச்சரித்தார். இதனை ஜெயா தனது கணவரிடம் கூறி கண்டித்தார். பின்னர் ஜெயா தனது தாயாரிடம் வீட்டு வராண்டாவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது குமார் சமையல் அறைக்கு சென்றார். கணவர் சாப்பிட செல்வதாக நினைத்து ஜெயா தனது தாயாரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால் வெகு நேரம் ஆகியும் சமையல் அறையில் இருந்து கணவர் வெளியே வராததால் சந்தேகமடைந்து ஜெயா சமையலறைக்கு சென்று பார்த்தார். அப்போது மின் விசிறி கொக்கியில் ஜன்னல் திரை துணியினால் கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இது குறித்து முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.