புதுவை அரியாங்குப்பத்தில் பழிக்கு பழியாக ரவுடி கொலை 5 பேர் சிக்கினர்-பரபரப்பு தகவல்கள்
- கொலை பற்றி அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
- கொலை சம்பவம் காரணமாக அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தில் பழிக்கு பழியாக ரவுடி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
புதுைவ அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் மாஞ்சாலை வீதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் பிரவீன்(வயது19). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதாசிவம் மனைவி மற்றும் மகனை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் பிரவீன் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் ரோடு ஆர்.கே.நகர் பெரியார் சிலை அருகே வந்த போது அங்கு பதுங்கியிருந்த ஒரு கும்பல் பிரவீனை வழி மறித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன் தன்னை கொல்ல அந்த கும்பல் வழி மறித்ததை பார்த்தும் அக்கும்பலிடமிருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பியோடினார்.
ஆனால் அந்த கும்பல் பிரவீனை ஓடஓட விரட்டி கத்தியாலும், அரிவாளாளும் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டது.
இந்த கொலை பற்றி அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் பிரவீன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிரவீன் கொலை செய்யப்பட்டது ஏன்? அவரை கொலை செய்த கும்பல் யார்? என்பது தெரியவந்தது.
இதற்கிடையே பிரவீன் சிறு வயது முதலே கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவுடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜிம்பாண்டியன் கொலை வழக்கில் பிரவீனுக்கு தொடர்பு இருந்தது. அப்போது பிரவீனுக்கு 17 வயதே ஆனதால் அவரை போலீசார் கைது செய்து அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
அதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பிரவீன் தனி கோஷ்டியை உருவாக்கி கொண்டு அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தாக்கி வந்துள்ளார்.
மேலும் பிரவீனுக்கும் ஜிம்பாண்டியனின் தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் இருந்து வந்தது.
இதனால் ஜிம்பாண்டியனை கொலை செய்த பிரவீனை பழிக்கு பழியாக கொல்ல ஜிம்பாண்டியன் கூட்டாளிகள் திட்டமிட்டு இருந்தனர்.
இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜிம்பாண்டியனின் கூட்டாளியான ஆகாஷ் என்பவரை ஜிப்மர் ஆஸ்பத்திரி முன்பு பிரவீன் செருப்பால் தாக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
அதுநாள் முதல் பிரவீன் மீது ஆகாஷ் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அரியாங்குப்பம்-வீராம்பட்டினம் ரோட்டில் உள்ள ஒரு மதுக்கடையில் மது குடிக்கும் போது பிரவீனுக்கும், ஆகாஷ் தரப்பினருக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. நேற்று காலை பிரவீன் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையில் ஆகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான மனோ, கவி, ஜான் மற்றும் ஷேக் ஆகியோர் பிரவீன் வீட்டுக்கு சென்று அங்கிருந்த அவரது தாயார் விஜயலட்சுமியிடம் உனது மகன் எங்கே என்று கேட்டுள்ளனர்.
உன் மகனை சும்மா விடமாட்டோம் என்று கூறியதோடு உன் மகனின் கதையை முடித்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர். நேற்று மாலை முதல் பிரவீனை அந்த கும்பல் நோட்டமிட்டு வந்துள்ளது.
நேற்று இரவு 8 மணிக்கு பிரவீன் வீட்டில் இருந்து அதே பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மதுவாங்க மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது அவரை கும்பல் பின் தொடர்ந்து வந்ததை பார்த்தும் பிரவீன் அவர்களிடமிருந்து சிக்காமல் இருக்க ஒவ்வொரு தெருவாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
கடைசியாக அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் பெரியார் சிலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த பிரவீனை ஆகாஷ் தனது கூட்டாளிகள் 8 பேருக்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து ஓடஓட வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இதில் இரவோடு இரவாக கொலையாளிகள் 5 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் காரணமாக அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.