புதுச்சேரி

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டதொடர் 10-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-07-26 06:54 GMT   |   Update On 2022-07-26 06:54 GMT
  • முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான சட்டசபை கூட்டத்தொடர் அடுத்தமாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி கூடுகிறது.
  • அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட்டும், ஆகஸ்ட், செப்டம்பரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டிலும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மார்ச் மாதம் 5 மாத செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான சட்டசபை கூட்டத்தொடர் அடுத்தமாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார்.

மறுநாள் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிகிறது. கூட்டத்தொடர் குறைந்த பட்சம் 15 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது.

இத்தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை 15-வது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் வரும் ஆகஸ்டு 10-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபை அலுவல் நாட்களை முடிவு செய்யும். முழு பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார். காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய தகவல் தொழில்நுட்ப துறையுடன் பேசி வருகிறோம்.

2012-க்கு பிறகு புதுவை கணக்கை முழுமையாக அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை. இதற்காக தனி தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அரங்கில் நாளை (புதன்கிழமை) தணிக்கை குழுவின் கூட்டம் நடக்கிறது. இதில் கவர்னர் தமிழிசை தலைமையில் 600 அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நானும், பொதுக்கணக்கு குழு தலைவர் கே.எஸ்.பி. ரமேசும் பங்கேற்கிறோம்.

இந்த பட்ஜெட்டில் செலவினங்களை சமர்பித்த பிறகுதான் அடுத்த பட்ஜெட்டில், துறைகளுக்கு நிதி ஒதுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கணக்குகளை முழுமையாக ஒப்படைக்கும்போது மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக நிதி கிடைக்கும். ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறோம். 25 சதவீத அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை.

சட்டமன்றத்தில் பதாகைகள், பேனர் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. புதிய சட்டமன்ற கட்டிடத்தை கட்ட டெல்லியை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளோம். விரைவில் பூமி பூஜை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News