புதுச்சேரி
null

ஏனாமில் அனுமதியின்றி செயல்பட்ட சூதாட்ட கிளப் பொதுமக்கள் முற்றுகை

Published On 2022-10-31 14:23 IST   |   Update On 2022-10-31 14:24:00 IST
  • ஒரு அனுமதி பெறாத சூதாட்ட கிளப்பை மக்களே கண்டுபிடித்தனர். அதனை முற்றுகையிட்டு போராடத்தில் ஈடுபட்டனர்.
  • ஏனாமில் ஒரு மணி நேரத்திற்கு பதற்றமான சூழல் நிலவியது.

புதுச்சேரி:

புதுவையின் ஏனாம் பிராந்தியத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடத்தப்படுகிறது.

3 கிளப் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்த நிலையில் 20-க்கும் மேற்பட்ட கிளப் அனுமதியின்றி நடத்தப்படுகிறது.

இதில் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்க்கு பணம் வைத்து சூதாடி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், அவற்றை உடனே மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தீபாவளியையொட்டி ஏனாமில் ராயல் மனமகிழ் மன்றத்தில் நடந்த சூதாட்டத்தை ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி என்ற பெயரில் உள்ளே நுழைந்து கையும் களவுமாக பிடித்து சீல் வைத்தனர்.

இந்த நிலையில் மேலும் ஒரு அனுமதி பெறாத சூதாட்ட கிளப்பை மக்களே கண்டுபிடித்தனர். அதனை முற்றுகையிட்டு போராடத்தில் ஈடுபட்டனர்.

ஏனாமில் பதற்றத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் ஏராளமான பெண்களும் இளைஞர்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

மேலும், ஏனாம் பகுதியை ஒரு சூதாட்ட கும்பல் வளைத்து போட்டுள்ளது.அரசு விரைந்து இவற்றை மூட வேண்டும். இல்லையென்றால் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சூறையாடுவோம் என எச்சரித்தனர்.

தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஏனாமில் ஒரு மணி நேரத்திற்கு பதற்றமான சூழல் நிலவியது.

Similar News