புதுச்சேரி

நரிக்குறவர் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய புதுவை சபாநாயகர்

Published On 2022-10-25 10:09 IST   |   Update On 2022-10-25 10:09:00 IST
  • தீபாவளி என்றால் உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் சூழ புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் வழக்கம்.
  • நரிக்குறவர்கள் தீபாவளியன்று வீடு வீடா சென்று இனிப்பு-பட்டாசு வாங்குவது வழக்கம்.

புதுச்சேரி:

புதுவை கிருஷ்ணா நகரில் ஜாலி ஹோம்ஸ் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது.

ஜாலி ஹோம் காப்பகத்தில் நரிக்குறவர்களின் குழந்தைகளும் ஆதரவற்றோரின் குழந்தைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தங்க இடம், உடுக்க உடை, உணவு என நின்று விடாமல் கல்வியுடன் பாட்டு, நடனம், விளையாட்டு ஆகியவையும் கற்று கொடுக்கப்படுகிறது. இதனால் இங்குள்ள குழந்தைகள் தீபாவளிக்கு என தனி பாடலை உருவாக்கி உள்ளனர்.

இவர்களுடன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தீபாவளி கொண்டாடினார். சிறுவர்கள், குழந்தைகளுக்கு இனிப்பு பட்டாசு வழங்கி உற்சாகப்படுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசியதாவது:-

தீபாவளி என்றால் உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் சூழ புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால் நரிக்குறவர்கள் தீபாவளியன்று வீடு வீடா சென்று இனிப்பு-பட்டாசு வாங்குவது வழக்கம்.

இதுபோன்று வாழ்வின் விளிம்பு நிலையில் உள்ள மக்களும் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.

பிரதமரின் வழிகாட்டுதலோடு புதுவை அரசும் இந்த சமூக மக்களுக்கு மட்டுமல்லாமல் வறுமை நிலையில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வாழ்வின் நிலையை உயர்த்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த தீபாவளி திருநாளை ஜாலி ஹோம் இல்ல குழந்தைகளோடு கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் தீபாவளி திருநாளை தொகுதி மக்களோடு இணைந்து கொண்டாடுவேன். இந்த முறை இந்த குழந்தைகளோடு கொண்டாடியது மகிழ்ச்சி அளித்தது.

இவ்வாறு சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.

Tags:    

Similar News