புதுச்சேரி
கோப்பு படம்

கவர்னருக்கு நில அதிகாரம் வழங்குவற்கு தி.மு.க. எதிர்ப்பு

Published On 2022-06-25 09:44 GMT   |   Update On 2022-06-25 09:44 GMT
  • புதுவை மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்த சீராய்வுக் கூட்டத்தில் நிலம் சம்பந்தமான அதிகாரத்தை கவர்னர் தமிழிசைக்கு வழங்குதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
  • இதை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கடுமையாக கண்டிக்கின்றேன்

புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

புதுவை மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்த சீராய்வுக் கூட்டத்தில் நிலம் சம்பந்தமான அதிகாரத்தை கவர்னர் தமிழிசைக்கு வழங்குதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கடுமையாக கண்டிக்கின்றேன்.

ஏற்கனவே புதுவையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு போதிய அதிகாரம் இல்லை, எனவே அதிகாரம் கிடைக்கச் செய்ய வலியுறுத்தி வரும் நிலையில் இருக்கும் அதிகாரத்தையும் கவர்னர் பறிக்க நினைப்பது ஏற்புடையது அல்ல. தற்போது நிலம் கையகப் படுத்தவும், கொடுக்கவும் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புதுவை மக்களின் தேவைகள், எண்ணங்கள் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குத்தான் தெரியும்.

மத்திய அரசால் நியமிக்கப்படும் வேறு மாநிலத்தை சேர்ந்த கவர்னர்களுக்கு நிச்சயம் தெரியாது. தெரியாத ஒன்றில் தனக்கு அதிகாரம் வேண்டும் என நினைப்பது சரியானது அல்ல.

அவ்வாறு கவர்னருக்கு நிலத்தில் அதிகாரம் வழங்கினால் மக்களின் எண்ணங்கள், விருப்பத்திற்கு மாறாக நிலங்களை கையகப்படுத்தவும், விற்கவும் செய்வார்கள். இது புதுவை மாநிலத்திற்கு பாதிப்பையே அதிகளவு ஏற்படுத்தும்.

எனவே நிலம் சம்பந்தமான அதிகாரம் தற்போதுள்ளபடி மாநில அரசிடமே நீடிக்க வேண்டும். கவர்னருக்கு செல்லும் வகையில் ஆலோசனை செய்ததே தவறு. அதுவும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் முன்னிலையிலேயே இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது மிக, மிக தவறு.

இந்த கூட்டத்தை முதல்- அமைச்சர் புறக்கணித்து வெளியேறியிருக்க வேண்டும். எனவே புதுவை நிலத்தில் கவர்னருக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை கவர்னர், ஆட்சியாளர்கள் என யாரும் எடுக்கக்கூடாது. மீறி அதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் புதுவை மக்களுக்கான அதிகாரத்தை மீட்டெடுக்க தி.மு.க. தீவிரமாக போரா ட்டக்களத்தில் இறங்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News