- புதுவை ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தினம், காந்தி மற்றும் வள்ளலார் பிறந்த தினங்கள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
- பாரத மாதா சிலை முன்னே செல்ல ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சீருடையில் அணிவகுத்தனர்.
புதுச்சேரி:
புதுவை ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தினம், காந்தி மற்றும் வள்ளலார் பிறந்த தினங்கள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
அதனையொட்டி, புதுவை பாலாஜி திரையரங்கம் அருகே உள்ள நாடார் உறவின் முறை சங்க இடத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை செல்வகணபதி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பாரத மாதா சிலை முன்னே செல்ல ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சீருடையில் அணிவகுத்தனர். ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக கடலூர் சாலையில் உள்ள சுதேசி மில் திடலை சென்றடைந்தது. அங்கு 6 மணிக்கு முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
சீருடை அணிவகுப்பு ஊர்வலத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், ரிச்சர்ட்ஸ் ஜான்குமார், அசோக்பாபு, சிவசங்கர் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்திற்கு ஆதித்யா பள்ளி தாளாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ரவிக்குமார் கோரிகானா முன்னிலை வகித்தார். தமிழ் மாநில மக்கள் தொடர்பு பொறுப்பாளர் ராமராஜசேகர் சிறப்புரை ஆற்றினார். செல்வகணபதி எம்.பி., தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ, ஆர்.எஸ்.ஸ். மாவட்ட தலைவர் சீனிவாசன், விபாக் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.