பொம்மபுர ஆதீனத்துக்கு சொந்தமான இடம் மீட்பு
- புதுவை அருகே உள்ள பொம்மையர் பாளையத்தில் மயிலம் பொம்மபுர ஆதின மடம் உள்ளது.
- இந்த மடத்தினை சிவஞான பாலய சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை அருகே உள்ள பொம்மையர் பாளையத்தில் மயிலம் பொம்மபுர ஆதின மடம் உள்ளது. இந்த மடத்தினை சிவஞான பாலய சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்.
பொம்மபுர ஆதினத்துக்கு சொந்தமான இடங்களை பலர் ஆக்கிரமித்து கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்ற செயல்முறை நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிள்ளை சாவடி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதியில் பொம்மபுர ஆதினத்துக்கு சொந்தமான இடத்தை வடிவாம்பிகை இளையராஜா தம்பதியினர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இது தொடர்பாக ஆதீனம் மூலம் கோர்ட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயராணி தலைமையில் ஆய்வாளர்கள், செல்வராஜ், தினேஷ் செயலர் சிவக்குமார் மற்றும் வானூர் வருவாய்த்துறையினர், கோட்டகுப்பம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், தலைமை காவலர் ராஜாராம் முன்னிலையில் ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த வீட்டை அப்புறப்படுத்தினர். மீட்கப்பட்ட இடம் பொம்புர ஆதீனம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
பிரச்சனை ஏதும் நடக்காமல் இருக்க தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.