புதுச்சேரி

வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு மற்றும் கோப்பை வழங்கிய காட்சி.

கிரிக்கெட் அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு-ரங்கசாமி வழங்கினார்

Published On 2022-09-26 09:39 GMT   |   Update On 2022-09-26 09:39 GMT
  • புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் சங்கத்தின் சார்பாக 14-வது வருட டி20 கிரிக்கெட் லீக் மற்றும் நாக்அவுட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.
  • புதுவை கோரிமேட்டில் உள்ள காவலர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் புதுவை காவல்துறை கிரிக்கெட் அணியும் வில்லியனூரைச் சேர்ந்த யூவி கிரிக்கெட் அணியும் மோதியது.

புதுச்சேரி:

புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் சங்கத்தின் சார்பாக 14-வது வருட டி20 கிரிக்கெட் லீக் மற்றும் நாக்அவுட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

போட்டியில் புதுவை காவல்துறை அணி , வழக்கறிஞர் கிரிக்கெட் அணி, உள்பட 64 கிரிக்கெட் அணிகள் பங்கு பெற்றன. லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகள் மூலம் மொத்தம் 68 போட்டிகள் நடந்தது. புதுவையைச் சேர்ந்த 1002 உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

புதுவை கோரிமேட்டில் உள்ள காவலர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் புதுவை காவல்துறை கிரிக்கெட் அணியும் வில்லியனூரைச் சேர்ந்த யூவி கிரிக்கெட் அணியும் மோதியது. இதில் யூவி கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.புதுவை யூனியன் கிரிக்கெட் அகாடமி சங்கத்தின் தலைவர் ராமச்சந்திர மூர்த்தி வரவேற்றார்.முதல் பரிசு பெற்ற வில்லியனூர் யூவி கிரிக்கெட் அணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கோப்பையுடன் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கினார்.

2-வது பரிசு பெற்ற புதுவை காவல்துறை அணிக்கு ரூ 25 ஆயிரம் ரொக்க பரிசுடன், கோப்பையும், 3-வது பரிசு பெற்ற லாஸ்பேட் கிரிக்கெட் அணிக்கு கோப்பையுடன் ரூ.15 ஆயிரமும், 4-வது பரிசு பெற்ற சோமு கிரிக்கெட் அணிக்கு ரூ.10 ஆயிரத்துடன் கோப்பையும் வழங்கப்பட்டது.

இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருது யூவி அணி வீரர் வெங்கட்டுக்கும், சிறந்த தொடர் நாயகன் விருது காவல்துறை அணி பிரபுவுக்கும், சிறந்த பந்து வீச்சாளர் விருது யூவி அணி அபிக்கும், சிறந்த வருங்கால விளையாட்டு வீரர் விருது தர்மாவுக்கும் வழங்கப்பட்டது.

தொடரின் சதம் அடித்த முத்திரபாளையம் அணி வீரர் வீராவுக்கும், பிரெஞ்ச் ஸ்டார் அணி வீரர் ராஜேசுக்கும், ஒரே போட்டியில் 6 விக்கெட் எடுத்த நியூ ஸ்டார் அணி வீரர் நித்தியானந்தம் ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், செந்தில்குமரன், ரோட்டரி துணை கவர்னர் அன்பழகன், மதிவாணன் ஆகியோர் பங்கேற்றனர். போட்டிகளை சிறப்பாக நடத்த உதவியாக இருந்த நடுவர் மற்றும் ஸ்கோரருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News