புதுச்சேரி

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பி.ஆர்.டி.சி. பஸ்கள்

புதுவை அரசு பஸ்கள் 3-வது நாளாக ஓடவில்லை- 12 ஊழியர்கள் பணிநீக்கம்

Published On 2022-06-25 05:48 GMT   |   Update On 2022-06-25 10:12 GMT
  • சென்னை, மாகி, திருப்பதி உட்பட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை.
  • புதுவையில் தனியார் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்படுதால் ஊழியர்கள் போராட்டத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

புதுச்சேரி:

புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) 500 நிரந்தர ஊழியர்களும் 270 ஒப்பந்த ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.

புதுவை அரசு போக்குவரத்து பஸ்கள் செல்லும் வழித்தடத்தில் கடந்த சில மாதமாக நேர பிரச்னை தலைதூக்கி வருகிறது. பி.ஆர்.டி.சி. டிரைவர்கள், கண்டக்டர்களை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குகின்றனர்.

இந்த சம்பவங்களை கண்டித்து நேற்று முன்தினம் முதல் பிஆர்டிசி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி பாதுகாப்பு இல்லை, பணி நிரந்தரம் செய்யவில்லை என கோஷம் எழுப்பினர்.

இதனால் உள்ளூர் பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னை, மாகி, திருப்பதி உட்பட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை. ஊழியர்களின் முதல் நாள் போராட்டத்தால் ரூ.2.50 லட்சம், 2-ம் நாள் போராட்டத்தால் ரூ.6.50 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னறிவிப்பு இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட புதுவை, காரைக்காலை சேர்ந்த பி.ஆர்.டி.சி. ஒப்பந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் என 12 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நிர்வாகத்துடன் எதிர்கட்சி தலைவர் சிவா பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எடுக்க முயற்சித்து வருகிறார்.

புதுவையில் தனியார் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்படுதால் ஊழியர்கள் போராட்டத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

Tags:    

Similar News