புதுச்சேரி
ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பி.ஆர்.டி.சி. பஸ்கள்.

புதுவை அரசு பஸ்கள் 2வது நாளாக ஓடவில்லை- கிராமப்புற மக்கள் பாதிப்பு

Published On 2022-06-24 05:01 GMT   |   Update On 2022-06-24 06:10 GMT
  • பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • பி.ஆர்.டி.சி. பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படாததால் கிராமப்புற பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி:

புதுவையில் கடந்தசில நாட்களாக நேர பிரச்சினை காரணமாக புதுவை அரசு பஸ் (பி.ஆர்.டி.சி.) ஊழியர்களை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் புதுவையில் இருந்து முத்தியால்பேட்டைக்கு பி.ஆர்.டி.சி. மினி பஸ் புறப்பட்டு சென்றது. அதனை டிரைவர் சிவலிங்கம் ஓட்டினார்.

அப்போது அங்கு வந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் இணைந்து சிவலிங்கத்திடம் நேர பிரச்சினையை காரணம் காட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த சிவலிங்கம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பி.ஆர்.டி.சி. டிரைவர்- கண்டக்டர்கள் தாக்கப்பட்டனர்.

பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவையில் இருந்து இயக்கப்படும் பி.ஆர்.டி.சி. டி பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அவைகள் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இன்று 2-வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை.

சென்னை- திருப்பதி உள்ளிட்ட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை. பி.ஆர்.டி.சி. பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படாததால் கிராமப்புற பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News