- மூலக்குளம் களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் மோகன்
- செடிகள் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார்
புதுச்சேரி:
ரெட்டியார்பாளையம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ரெட்டியார்பாளையம் அருகே மூலக்குளம் களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது60). இவர் செடிகள் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு அன்பழகி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கமுள்ள மோகன் தினமும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து விட்டு குடிபோதையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பது வழக்கம். இதனை குடும்பத்தினர் கண்டித்த போது இந்த பழக்கத்தை மோகன் கைவிடவில்லை.
இந்த நிலையில் மோகன் மது குடித்து விட்டு மயங்கிய நிலையில் மேரி உழவர்கரை குண்டு சாலையில் விழுந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது மகன் பொன்னியப்பன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு மோகன் மயங்கி கிடந்த இடத்தின் அருகே செடிகளுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் (விஷம்) கிடந்தது.
மோகன் மதுவில் விஷத்தை கலந்து குடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து மோகனை அவரது மகன் பொன்னியப்பன் மீட்டு ஆட்டோவில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் பொன்னியப்பன் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.