கலந்துரையாடல் கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.
பயனாளிகள் நிதியை கையாடல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை
- ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம் வில்லியனூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.
- கழிவறை கட்டும் திட்டத்தில் கோடிக் கணக்கான ரூபாய் நிதியை பயனாளிகளுக்கு வழங்காமல் கையாடல் செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம் வில்லியனூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு சங்க கவுரவத் தலைவர் பிரேமதாசன் தலைமை தாங்கினார். ஆலோசகர் ரவி வரவேற்றார். சங்க தலைவர் பொன்னி, செயலாளர் ஜெசிந்தாமேரி, பொருளாளர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும் 200 ஊழியர்கள் தற்பொழுது மதிப்பூதியமாக பெற்று வரும் ரூ. 7 ஆயிரத்தை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி அவர்களின் பணி பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர், துறை அமைச்சர், துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளேன். இது தொடர்பாக சட்டமன்றத்தில் கோரிக்கை விடுப்பேன். தேவைப்பட்டால் ஊழியர்க ளுடன் இணைந்து கோரிக்கை நிறைவேறும் வரை போராட தயாராக உள்ளேன்.
கழிவறை கட்டும் திட்டத்தில் கோடிக் கணக்கான ரூபாய் நிதியை பயனாளிகளுக்கு வழங்காமல் கையாடல் செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் குடும்பத்திற்கு 3 நாள் கூட வேலை கிடைக்காமல் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி மாநில அளவில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தப்படும்.
இவ்வாறு சிவா பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி மற்றும் வாழ்வாதார இயக்க பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.