புதுச்சேரி

கோப்பு படம்

விஷ குளவி கொட்டியதில் முதியவர் பலி

Published On 2022-07-22 10:22 IST   |   Update On 2022-07-22 10:22:00 IST
  • ராமநாதன் அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார்
  • அப்போது அங்கு கூடுகட்டியிருந்த விஷகுளவிகள் பறந்து வந்து ராமநாதனின் தலை, முகத்தில் கொட்டியது

புதுச்சேரி:

சேதராப்பட்டில் விஷ குளவி கொட்டியதில் முதியவர் பலியானார். புதுவை சேதராப்பட்டு புதுத்தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது67). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் ராமநாதன் அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு கூடுகட்டியிருந்த விஷகுளவிகள் பறந்து வந்து ராமநாதனின் தலை, முகத்தில் கொட்டியது. இதனால் வலிதாங்க முடியாமல் அலறியடித்துக் கொண்டு ராமநாதன் வீட்டுக்கு விரைந்து வந்தார்.

அங்கு தனது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவரை உறவினர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ராமநாதன் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமநாதன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது சகோதரர் பஞ்சநாதன் கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News