புதுச்சேரி

கோப்பு படம்.

காங்கிரசை தி.மு.க.விடம் அடமானம் வைத்துவிட்டார் நாராயணசாமி-அன்பழகன் தாக்கு

Published On 2022-12-14 09:07 GMT   |   Update On 2022-12-14 09:07 GMT
  • புதுவை முதல் -அமைச்சர் ரங்கசாமி ஆள்தான் உயர்ந்தவர் கவர்னரிடம் அடிபணிந்து பொம்மை ஆட்சி நடத்துகிறார் என தமிழக முதல்-அமைச்சர் பேசியது நாகரீகற்ற விமர்சனம்.
  • காலாப்பட்டில் உள்ள ரசாயன தொழிற்சலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை முதல் -அமைச்சர் ரங்கசாமி ஆள்தான் உயர்ந்தவர் கவர்னரிடம் அடிபணிந்து பொம்மை ஆட்சி நடத்துகிறார் என தமிழக முதல்-அமைச்சர் பேசியது நாகரீகற்ற விமர்சனம். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

துணைநிலை ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தமிழக முதல்-அமைச்சர் தெரிந்து பேச வேண்டும். எதிர்கட்சி தலைவராக இருந்த போது சட்டையை கிழித்துக் கொண்டு கவர்னரிடம் முறையிட்டவர்தான் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின். ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைபாடு, ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைபாடா?

தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும் என புதுவை தி.மு.க. அமைப்பாளர் சிவா கூறியதை விமர்சித்த முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தற்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறும் போது அது அவர்களது விருப்பம் என மழுப்புகிறார். தன்னுடைய சுயநலத்திற்காக காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக ஸ்டாலினிடம் அடமானம் வைத்து விட்டார்.

காலாப்பட்டில் உள்ள ரசாயன தொழிற்சலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு குறைந்த அளவில் இழப்பீடு வழங்கப்பட்டு பிரச்சினை மூடி மறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிலாளர்கள் பயம் கலந்த பீதியுடன் பணி செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து கவர்னர், முதல்-அமைச்சர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அந்த தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட வேண்டும்

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

Tags:    

Similar News