புதுச்சேரி

கோப்பு படம்

இரு தரப்பிலும் மோதல்; கத்தி குத்து

Published On 2022-06-28 09:11 GMT   |   Update On 2022-06-28 09:11 GMT
  • புதுவையில் வீட்டு மனை தகராறில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பெண்ணுக்கு கத்தி குத்து விழுந்தது.
  • புதுவை லாஸ்பேட்டை கொட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குத்தூஸ்

புதுச்சேரி:

புதுவையில் வீட்டு மனை தகராறில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பெண்ணுக்கு கத்தி குத்து விழுந்தது.

புதுவை லாஸ்பேட்டை கொட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குத்தூஸ். இவரது மனைவி எழிலரசி (வயது 59). இவரது வீட்டுக்கும் அருகில் உள்ள பாலன் குடும்பத்துக்கும் வீட்டு மனை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் பாலன் அவரது மனைவி மோகனாம்பாள் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எழிலரசி மற்றும் அவரது மகன் அரி அமிர்தராஜ் (27). ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இருதரப்பினருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இந்த மோதலில் பாலன் தரப்பினர் எழிலரசியை கத்தியால் குத்தினர். மேலும் அவரது மகனையும் சரமாரியாக தாக்கினார்கள். அதோடு எழிலரசி கையில் வைத்திருந்த கேமராவையும் அவர்கள் பறித்து அடித்து நொறுக்கினார்கள்.

இதுபோல் எழிலரசி தரப்பினர் இரும்பு கம்பியால் பாலனையும் தாக்கினர். இந்த மோதலில் காயமடைந்த எழிலரசி மற்றும் பாலன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் தனித்தனியே கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் இருதரப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News