கோப்பு படம்
மத்திய அரசு புதுவை அரசை மிரட்டுகிறது எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு
- பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சின்ன மணிக்கூண்டு அருகே நடந்தது
- கூட்டத்துக்கு பழனிராஜா முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சின்ன மணிக்கூண்டு அருகே நடந்தது.
கூட்டத்துக்கு பழனிராஜா முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க. செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ்காந்தி, தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ.,க்கள் கென்னடி, சம்பத், செந்தில் குமார், மற்றும் சுப்புராயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ., பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் தி.மு.க. அதிக இடங்கள் கேட்டு வெற்றி பெறும். பா.ஜனதா சார்பில் மாதம் 5 மத்திய மந்திரிகள் புதுவைக்கு வருகின்றனர். 6 மாதத்துக்கு ஒரு முறை உள்துறை மந்திரி அமித்ஷா வருகிறார். 2 முறை மோடி வந்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா போட்டியிட அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
பிரதமர், உள்துறை மந்திரி, மத்திய மந்திரிகள், பல்வேறு வாக்குறுதிகளை அளித்த னர். ஆனால் எதையும் செயல்படுத்த வில்லை. தி.மு.க. ஆட்சியில் அனைத்து பஞ்சாலைகளையும் திறந்து வேலைவாய்ப்பு அளித்தது. இன்று பஞ்சாலைகளை மூடி அரசாணை வெளியிடுகின்றனர்.
மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடி அளித்துள்ளதாக மத்திய மந்திரி முருகன் கூறியது உண்மையில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு கொடுத்த நிதியை விட குறைவாகவே அளித்தனர். இந்த ஆண்டு ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்போவதாக கூறுகின்றனர். அரசிடம் எந்த வருவாயம் இல்லாமல் எப்படி பட்ஜெட் தாக்கல் செய்வார்கள்?
இந்த பட்ஜெட் மிக மோசமான பட்ஜெட்டாக இருக்கும். தமிழகத்தில் ரத்தின கம்பளம் விரித்து தொழிற்சாலைகளை வரவேற்கின்றனர், பல்வேறு தொழில் கொள்கை தருகின்றனர். புதுவையில் என்ன தொழில் கொள்கை உள்ளது? மத்திய அரசு நினைத்தால் புதுவையை செல்வ செழிப்பாக மாற்ற முடியும்.
ஆனால் மத்திய அரசு 10 பைசா கூட தரவில்லை, தொழிற்சாலைகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, மிரட்டி புதுவை மாநில அரசாங்கத்தை பணிய வைக்கும் நிலை உருவாகியுள்ளது.
புதுவையை காப்பாற்ற, தொழிற்சாலைகளை கொண்டு வர, வேலை வாய்ப்புகளை உருவாக்க தமிழகம்போல புதுவையிலும் நல்லாட்சி அமைக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
பொதுகூட்டத்தில் திமுக பொறுப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன் மற்றும் துணை அமைப்பாளர்கள் வழக்கீல் செந்தில்குமார், சண்.குமரவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், தி.மு.க. மக்கள் சேவை மையம் மதன்பாபு, தி.மு.க நிர்வாகிகள் கணேசன், செல்வம், ரவி, பலராமன், கலைவாணி, சிவக்குமார், தனசேகர், லோகநாதன், கோபிநாத், செந்தில்முருகன், மதன்பாபு, நவீன், பிரபாகரன் எழிலன், மூர்த்தி, சந்துரு, ரெமோ, அல்போன்ஸ், பிரபாகரன், மோகன், ராஜ்குமார், சண்முகம், இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உதயநிதி ஸ்டாலின் மன்றம் மாநில தலைவர் உத்தமன் நன்றி கூறினார்.