புதுச்சேரி

கோப்பு படம்.

அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் கொள்ளையடித்த 10 பேர் கைது

Published On 2023-03-25 08:57 GMT   |   Update On 2023-03-25 08:57 GMT
  • வீட்டின் பீரோவில் இருந்த ரூ.38 லட்சம் பணம், 82 சவரன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.
  • அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் எப்போதும் பணம் இருக்கும் என ரியாஸ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை ரெயின்போ நகர் 6-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி(60), அ.தி.மு.க. நிர்வாகி. இவர், சில நாட்களுக்கு முன்பு வீட்டின் எதிரே நின்று கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த 3 நபர்கள் அவரிடம் ஒரு முகவரியை கேட்டு விசாரித்தனர். அதற்கு கருணாநிதி பதிலளித்த போது, 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை அவரது கழுத்தில் வைத்து, அவரது வீட்டின் முதல் மாடிக்கு அழைத்து சென்றனர்.

அவரை மிரட்டி, வீட்டின் பீரோவில் இருந்த ரூ.38 லட்சம் பணம், 82 சவரன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.

தகவலறிந்த கிழக்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஸ்வாதி சிங், பெரியகடை இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர்.

தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பார்வையிட்டு, போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஏற்கனவே குற்ற வழக்கில் தொடர்புடைய ஒருவரின் முகம் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதை வைத்து போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில், கொள்ளையர்களின் மூளையாக கிருஷ்ணகுமார் என்பவர் செயல்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே 3 கொலை வழக்கு உட்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அப்பகுதியில் பழக்கடை வைத்துள்ள ரியாஸ் என்பவர் கிருஷ்ணகுமாரிடம் தகவல் கொடுத்துள்ளார். அ.தி.மு.க. நிர்வாகி வீட்டில் எப்போதும் பணம் இருக்கும் என ரியாஸ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 2 மாதமாக கொள்ளையடிக்க திட்டமிட்டு கருணாநிதியை பின்தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதன்பின் கொள்ளையர்கள் ஒன்றாக அமர்ந்து மதுஅருந்தி திட்டம் தீட்டியுள்ளனர்.

இதன்படி சம்பவத்தன்று முகவரி விசாரிப்பது போல விசாரித்து பின் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர் என தெரியவந்தது.

இதையடுத்து சீனியர் எஸ்.பி. நாராசைதன்யா உத்தரவின்பேரில் 2 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்த கொள்ளையர்களான கிருஷ்ணகுமார், வெற்றிவேல், மார்க்கெட் கார்த்திக், மெக்கானிக் கார்த்தி, சையது ரியாஸ், ஆனந்து, ஸ்டாலின், முகமது ஆசிக் அலி, ஜான், மணி ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

இத்தகவலை போலீஸ் சூப்பிரெண்டு சுவாதி சிங், பெரியகடை இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.14 லட்சம் ரொக்கம், ஒரு இண்டிகா கார், செயின், மோதிரம் உள்ளிட்ட தங்க ஆபரணங்கள், 6 செல்போன்கள், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News