புதுச்சேரி

கோப்பு படம்.

ஏரிக்கரையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-09-22 11:13 IST   |   Update On 2022-09-22 11:13:00 IST
  • திருக்கனூர் அருகே ஏரிக்கரையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  • மது விலையை விட கஞ்சா குறைந்த விலைக்கு கிடைப்பதால் இளைஞர்கள் கஞ்சாவை வாங்கி புகைத்து போதையில் திளைக்கின்றனர்.

புதுச்சேரி:

திருக்கனூர் அருகே ஏரிக்கரையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுவையில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி சமூக விரோதிகள் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள்.

மது விலையை விட கஞ்சா குறைந்த விலைக்கு கிடைப்பதால் இளைஞர்கள் கஞ்சாவை வாங்கி புகைத்து போதையில் திளைக்கின்றனர். இதனை கட்டுப்படுத்துவதோடு கஞ்சா விற்பவர்களை கடுமையான சட்டத்தில் தண்டிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி போலீசாரும் உரிய நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.

காலாப்பட்டு பகுதியில் பல்கலைக்கழக மற்றும் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற புத்துப்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்த 3 வாலிபர்களை காலாப்பட்டு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் திருக்கனூர் அருகே சோம்பட்டு ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர். அப்போது அவர் 300 கிராம் கஞ்சாவை சட்டை பையில் பதுக்கி வைத்திருந்தார். அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் உருளையன்பேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சன்(வயது24) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜான்சனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News