புதுச்சேரி

கொலை செய்யப்பட்ட செந்தில்குமார்

பைனான்சியர் கொலையில் 2 பேர் சிக்கினர்

Published On 2022-07-29 15:02 IST   |   Update On 2022-07-29 15:02:00 IST
  • தந்தை மகன் இருவரும் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.
  • செந்தில்குமாருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

புதுச்சேரி:

கடலுாரை அடுத்துள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 65) இவரது மகன் செந்தில்குமார் வயது (40) தந்தை மகன் இருவரும் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். செந்தில்குமாருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் கடலுாரில் வாடகை வீட்டில் குடியேறி, தனது குழந்தைகளை அங்குள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்தார்.

கடந்த மாதம் 23-ந் தேதி இரவு 7 மணியளவில் செந்தில்குமார் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை. அவரது மனைவி, செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், அவர் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

செந்தில்குமார் எப்போதாவது பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் கிராமத்திற்கு மதுகுடிக்க செல்வது வழக்கம் என்பதால், அவரது உறவினர்கள் சோரியாங்குப்பம் பகுதியில் தேடி வந்தனர். 24-ந்தேதி காலை கரும்பு தோட்டத்தில் செந்தில்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்- இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்டு ஒரு மாதமாக ஆகியும் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதை அடுத்து இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் சிறப்புப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் செந்தில்குமாரோடு பழகிய இருவர் தான் அந்த கொலையில் ஈடுபட்டது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கொலையாளிகள் இருவரையும் பிடித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு தான் செந்தில்குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வரும்.

Tags:    

Similar News