வழிபாடு
காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் கருடசேவை

காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Published On 2022-05-28 07:34 GMT   |   Update On 2022-05-28 07:34 GMT
உற்சவர் வைகுண்டப் பெருமாள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் ஜொலிக்க சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
காஞ்சீபுரம் குண்டவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 26-ந் தேதி அதிகாலை கொடியேற்றதுடன் தொடங்கியது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய வைபவமான கருட சேவை உற்சவம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதையொட்டி உற்சவர் வைகுண்டப் பெருமாள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் ஜொலிக்க சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

அர்ச்சகர்கள் சிறப்பு ஆராதனைகள்,கற்பூர தீபாராதனைகள் காட்டினார்கள். மேள தாளங்கள் முழங்க கோவில் வெளிபிரகாரத்தை வந்தடைந்து பின்னர் பஜனை கோஷ்டியினர் பஜனை பாடல்கள் பாட, மேள தாளங்கள் முழங்கியப்படி உற்சவர் வைகுண்டப்பெருமாள் கருட வாகனத்தில் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

வழி நெடுகிலும் திரண்டிருந்த திரளான பக்தர்கள் பூ, வாழைப்பழம், கற்பூர தீபாராதனைகளை தாம்பூல தட்டுகளில் ஏந்தியவாறு "கோவிந்தா கோவிந்தா" என பக்தி பரவச கோஷங்களை எழுப்பினார்கள். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

பிரம்மோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் செயல் அலுவலர் பூவழகி மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News