செய்திகள்
பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்

பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்

Published On 2021-08-11 10:58 IST   |   Update On 2021-08-11 14:25:00 IST
ஆடிப்பூரமான இன்று, தேரோட்டம் கோவில் உள் பிரகாரத்தில் நடந்தது. முன்னதாக ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது.

இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூர திருவிழா ஆடி மாதத்தில் விமரிசையாக நடத்தப்படும். சிகர நிகழ்ச்சியாக பூரம் நட்சத்திரம் அன்று பெரிய திருத்தேரோட்டம் நடைபெறும். அப்போது திரளான பக்தர்கள் குவிந்து தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் உள் பிரகாரத்திலேயே பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்தன. கடந்த 7-ந் தேதி கருடசேவையும் 9-ந்தேதி சயன சேவையும் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஆடிப்பூர தேரோட்டமும் பக்தர்கள் இன்றி கோவிலுக்கு உள்ளேயே நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆடிப்பூரமான இன்று, தேரோட்டம் கோவில் உள் பிரகாரத்தில் நடந்தது. முன்னதாக ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டன.

மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டு பட்டு வஸ்திரங்கள் சுவாமி-அம்பாளுக்கு அணி விக்கப்பட்டது.

பின்னர் ரெங்கமன்னாருடன் ஆண்டாள் சிறிய அளவிலான தங்கத் தேரில் எழுந்தருளினார். கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வடம் பிடித்து இழுக்க, கோவிலுக்கு உள்ளேயே தேரோட்டம் மிக எளிமையாக நடந்து முடிந்தது.

ஆடிப்பூரத்தையொட்டி விமரிசையாக நடைபெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இந்த ஆண்டும் எளிமையாக நடந்ததால் களை இழந்து காணப்பட்டது.

Similar News