செய்திகள்
முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதி வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

ஆடி அமாவாசை: கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடை

Published On 2021-08-06 14:29 IST   |   Update On 2021-08-06 14:29:00 IST
கொரோனாவைரஸ் 3-வது அலை சுற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது
இந்துக்களின் முக்கிய விசே‌ஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று.

இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல் நதி ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடிமறைந்துபோன தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. கொரோனா வைரஸ் 3-வது அலை சுற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் அவர்கள் வீடுகளிலேயே தர்ப்பணம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் இன்றி ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள், விசே‌ஷ பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனை போன்றவை வழக்கம்போல் நடக்கிறது. ஆடி அமாவாசை யையொட்டி நாளை மறுநாள் இரவு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்காது.

கன்னியாகுமரி கடற் கரைக்கு பக்தர்கள் புனித நீராட செல்லாத வகையில் அனைத்து பாதைகளும் பேரிகார்டு மூலம் அடைக்கப் பட்டுள்ளது. கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Similar News