செய்திகள்
அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் தொடங்கியது

Published On 2019-07-01 06:42 IST   |   Update On 2019-07-01 13:57:00 IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்று காலை தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்ய தொடங்கினர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்று தொடங்கியது. அனந்தசரஸ் குளத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் அத்தி வரதர் எழுந்தருளினார். வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் சிலைக்கு கோவில் பட்டாச்சாரியார்கள் ஜல சம்ப்ரோக்ஷணம், புண்ணியாவதனம் ஹோமம் ஆகியவை நேற்று நடத்தினர்.

இதைத் தொடர்ந்து அத்தி வரதருக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டன. ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வசந்த மண்டபத்தில் இன்று காலை 5:00 மணிக்கு முதல் அத்திவரதர் காட்சி தரத்தொடங்கினார். பக்தர்கள் காலை 5 மணி முதல் தரிசனம் செய்யத்தொடங்கினர்

முதல் 24 நாள் சயன கோலத்தில் ( ஜூலை 1-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை) அத்தி வரதர் காட்சிதருவார். அடுத்த 20 நாட்கள் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார். இன்று முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்கள் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கலாம்.



அத்திவரதரை அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசிக்கலாம். காஞ்சிபுரம் தாலுகாவை சேர்ந்தவர்கள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம்.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா என்பதால் காஞ்சிபுரம் நகர் முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.

Similar News