செய்திகள்

திருப்போரூர் முருகன் கோவிலில் தரிசன கட்டணம் உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி

Published On 2016-06-02 11:13 IST   |   Update On 2016-06-02 11:13:00 IST
திருப்போரூர் முருகன் கோவிலில் தரிசன கட்டணத்தை உயர்த்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்ததுள்ளனர்.

திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வாரவிடுமுறை, கிருத்திகை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

இக்கோவிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு அபிஷேகம் மற்றும் மொட்டை அடிப்பது, தங்கத் தேர் இழுப்பது போன்ற பல்வேறு வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

இதனால் கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு குத்தகை, முடிகாணிக்கை, அர்ச்சனை, மொட்டை டிக்கெட், சிறப்பு தரிசனம், உண்டியல் காணிக்கை உள்ளிட்ட பல்வேறு வகையினங்கள் மூலம் சுமார் 1 கோடி அளவில் வருமானம் வருகிறது.

நேற்று ஜூன் 1–ந் தேதி முதல் திருப்போரூர் முருகன்கோவிலில் புதிய அபிஷேக கட்டணம் குறித்த போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொட்டை காணிக்கை டிக்கெட் 10–லிருந்து 30 ரூபாயாகவும், காது குத்த 25–லிருந்து 50 ரூபாயாகவும், சிறப்பு தரிசனம் 10–லிருந்து 20 ரூபாயாகவும், திருமண பெண்அழைப்பு கட்டணம் 50–லிருந்து 150 ரூபாயாகவும், மூலவர் அபிஷேகம் 500–லிருந்து 1000 ரூபாயாகவும்,

உற்சவம் அபிஷேகம் கட்டணம் 750–லிருந்து 1500 ரூபாயாகவும், சக்கரஸ்தாபனம் அபிஷேகம் 1000–லிருந்து 2500 ரூபாயாகவும், தங்கத்தேர் கட்டணம் 1500–லிருந்து 2000 ரூபாயாகவும், கோயில் வளாகத்தில் திருமணம் நடத்த 1800–லிருந்து 2000 ரூபாயாகவும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் அற நிலையத்துறை ஆணையர் உத்தரவின்பேரில் நேற்றிலிருந்து நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கு பாதியாக உள்ள இந்த கட்டண உயர்வால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “கோவிலுக்கு பல்வேறு வகையினங்கள் மூலம் வருமானம் வருகிறது. அபிஷேகம் உள்ளிட்ட கட்டணங்கள் அதற்கேற்ப வகையில் குறைந்த சதவீதமாக உயர்த்தலாம் ஆனால் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக” பக்தர்கள் தெரிவித்தனர். கட்டணங்களை மறுபரிசீலனை செய்யுமாறு இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News