சித்திரை 2–ம் செவ்வாய்க்கிழமை: வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தர்மபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நாயகி அம்மன் சமேத வைத்திய நாத சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் முத்துகுமார சுவாமி,நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபரான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர். செவ்வாய் பரிகார ஸ்தலமாக இது இருப்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் தரிசனம் செய்ய பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் வைத்தீஸ்வரர் சுவாமியை குலதெய்வமாக வழிபடும் நகரத்தார்கள் எனும் நாட்டுகோட்டை செட்டியார் மக்கள் பல்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 2–ம் செவ்வாய்க்கிழமை இக்கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இன்று திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, காரைக்குடி போன்ற பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
சுவாமியை வேண்டி மஞ்சள் தடவிய சிறு குச்சியை கொண்டு வந்து கோவில் கொடி மரத்தில் வைத்து வழிபாடு செய்கின்றனர்.முன்னதாக கோவில் சித்தாமிர்தம் தீர்த்த குளத்தில் நீராடி வைத்தியநாதன், தையல்நாயகி, செல்வமுத்துகுமார சுவாமியை வணங்கி செல்கின்றனர்.