செய்திகள்

உலகக்கோப்பையில் 400 ரன்களுக்கு மேல், 10 விக்கெட்டுக்கள்: ஷாகிப் அல் ஹசன் அபார சாதனை

Published On 2019-06-25 09:47 GMT   |   Update On 2019-06-25 09:47 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காள தேச அணியில் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்.
உலகக்கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காள தேசம் அணி 62 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. சவுத்தாம்ப்டனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்தது. முஷ்பிகுர் ரகீம் 83 ரன்னும், ஷாகி அல் ஹசன் 51 ரன்னும் எடுத்தனர். முஜீப் உர் ரகுமான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 47 ஓவர்களில் 200 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேசம் 62 ரன்னில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற 3-வது வெற்றியாகும். இதன்மூலம் 5-வது இடத்துக்கு வங்காள தேசம் அணி முன்னேறி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 7-வது தோல்வியை தழுவியது. ஷாகிப் அல் ஹசன் 29 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

உலகக்கோப்பை போட்டியில் வங்காள தேச முன்னாள் கேப்டனான ஷாகிப் அல் ஹசன் ஆல்ரவுண்டர் பணியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் 6 ஆட்டத்தில் விளையாடி 476 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார். இதில் 2 சதமும், 3 அரை சதமும் அடங்கும். சராசரி 95.20 அதிகபட்சமாக 124 ரன் குவித்துள்ளார். அத்துடன் 10 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.



இதன்மூலம் உலகக்கோப்பை போட்டியில் 400 ரன்னுக்கு மேல் எடுத்து 10 விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார். மேலும் உலகக்கோப்பை போட்டியில் 1000 ரன்னை கடந்த முதல் வங்காளதேச வீரர் என்ற முத்திரையையும் பதித்தார். உலகக்கோப்பையில் 5 விக்கெட் கைப்பற்றிய முதல் வங்காள தேச வீரர் ஷாகிப் அல் ஹசன்தான்.
Tags:    

Similar News