நீங்கள் தலைவர்களில் சாம்பியன்: பிரதமர் மோடியை பாராட்டிய கயானா அதிபர்
- பிரதமர் நரேந்திர மோடி கயானா சென்றடைந்தார்.
- அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
ஜார்ஜ் டவுன்:
பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுமுறை பயணத்தின் மூன்றாவது கட்டமாக கயானா சென்றடைந்தார்.
கயானா நாட்டின் தலைநகர் ஜார்ஜ் டவுன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கயானா அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் அவரது மந்திரி சபையின் மூத்த உறுப்பினர்கள் வரவேற்றனர்.
அந்நாட்டு முறைப்படி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்நிலையில், கயானா அதிபர் முகமது இர்பான் அலி பிரதமர் மோடியைப் பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறுகையில், நீங்கள் இங்கே இருப்பது எங்களின் மிகப்பெரிய மரியாதை. தலைவர்கள் மத்தியில் நீங்கள் ஒரு சாம்பியன். நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு வழிநடத்தியுள்ளீர்கள். வளரும் நாடுகளுக்கு நீங்கள் வெளிச்சத்தைக் காட்டியுள்ளீர்கள். மேலும் பலர் தங்கள் சொந்த நாட்டில் பின்பற்றும் வளர்ச்சி அளவீடுகளையும் கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளீர்கள் என தெரிவித்தார்.
56 ஆண்டுக்குப் பிறகு கயானா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.