உலகம்

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

Published On 2023-09-26 13:04 IST   |   Update On 2023-09-26 13:04:00 IST
  • கப்பலில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் படை வீசியது.
  • விக்டர் சோகோலோவ் மற்றும் 33 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் படை தெரிவித்து உள்ளது.

கிவ்:

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும் இன்னும் இந்த சண்டை முடிவுக்கு வந்தபாடில்லை. உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் செய்து வருவதால் ரஷிய படையை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் ஆக்ரோஷத்துடன் போரிட்டு வருகின்றனர். உக்ரைனின் சில நகரங்களை ரஷியபடையினர் கைப்பற்றி உள்ளனர்.

அவற்றை உக்ரைன் வீரர்கள் பேராடி மீட்டு வருகின்றனர். ரஷியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து உக்ரைன் வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா பகுதியில் உள்ள வெடிமருந்து குடோனில் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலத்த சேதம் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் கிரீமியா தலைநகர் செவஸ்டோ போல் துறைமுகத்தில் உள்ள கருங்கடல் ரஷியா கடற்படை தலைமையகத்தில் உக்ரைன் ஏவுகணை வீசி தாக்குதலை நடத்தியது. கப்பலில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் படை வீசியது.

இந்த தாக்குதலில் கருங்கடல் கடற்படை தளபதியும், ரஷ்யாவின் மூத்த கடற்படை அதிகாரிகளுள் ஒருவரான விக்டர் சோகோலோவ் மற்றும் 33 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் படை தெரிவித்து உள்ளது. ஆனால் இந்த தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை உறுதிபடுத்தவில்லை. இதனால் இந்த ஏவுகணை தாக்குதலில் கடற்படை தளபதி இறந்தாரா? என்பதில் மர்மம் நீடித்து வருகிறது.

தாக்குதல் நடத்தப்பட்ட கிரீமியா பகுதியை உக்ரைனிடம் இருந்து ரஷியா கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News