உலகம்

குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டுமா? அல்லது அவர்களை கொல்ல வேண்டுமா?- அரசாங்கத்தை விமர்சித்து பெண் வெளியிட்ட வீடியோ

Published On 2022-08-11 10:16 GMT   |   Update On 2022-08-11 10:16 GMT
  • ரபியா என்ற பெண் விலைவாசி உயர்வால் தான் எதிர்கொள்ளும் நிதி பிரச்சினைகளை பற்றி அழுது புலம்பும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
  • குழந்தைக்கு மருந்து வாங்குவதை தவிர்க்க முடியுமா? அரசாங்கம் கிட்டத்தட்ட ஏழை மக்களை கொன்று விட்டது என ரபியா கூறி உள்ளார்.

கராச்சி:

பாகிஸ்தானில் பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கராச்சியை சேர்ந்த ரபியா என்ற பெண் விலைவாசி உயர்வால் தான் எதிர்கொள்ளும் நிதி பிரச்சினைகளை பற்றி அழுது புலம்பும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

ரபியாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு கடந்த 4 மாதங்களாக உடல்நலக்குறைவு இருப்பதாகவும், மருந்துகளின் விலை உயர்வால் சிகிச்சைக்கு அதிக செலவு செய்ய முடியாமல் தவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோவில் ரபியா பேசும்போது, நான் என்ன செய்ய வேண்டும் ? வீட்டு வாடகை, அதிக மின்சார கட்டணத்தால் என் குழந்தைகளுக்கு பால் மற்றும் மருந்து வாங்க முடியவில்லை. என் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டுமா? அல்லது அவர்களை கொல்ல வேண்டுமா? என கூறி உள்ளார்.

மேலும் என் குழந்தைக்கு மருந்து வாங்குவதை தவிர்க்க முடியுமா? அரசாங்கம் கிட்டத்தட்ட ஏழை மக்களை கொன்று விட்டது என கூறி உள்ளார்.

இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், நிதி மந்திரி மிப்தா இஸ்மாயில் இதற்கு பதிலளித்துள்ளார்.

அவர் கூறும்போது, ஜூன் மாதத்தில் அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்கவில்லை. மேலும் மருந்துகளுக்கும் புதிய வரிகளை விதிக்கவில்லை என்றார்.

Tags:    

Similar News