உலகம்

அடுத்த மாதம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புகிறார்

Published On 2022-08-16 06:39 GMT   |   Update On 2022-08-16 06:39 GMT
  • நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கியது.
  • நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான அவர் மீது பனாமா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டன.

கடந்த 2018-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப்புக்கு ஒரு வழக்கில் 7 ஆண்டு ஜெயிலும், மற்றொரு வழக்கில் 11 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே உடல்நல பாதிப்புக் காரணமாக லண்டன் சென்று சிகிச்சை பெற லாகூர் கோர்ட்டில் அனுமதி கேட்டார். அவரது தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு லண்டன் செல்ல அனுமதி அளித்தது.

இதையடுத்து 2019-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார். அதன் பின் அவர் நாடு திரும்பவில்லை.

இதற்கிடையே பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாய் ஷெரீப் புதிய பிரதமாக பொறுப்பேற்றார்.

நவாஸ் ஷெரீப்பின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காலாவதியான பின்பு, அதனை புதுப்பிக்க அப்போது ஆட்சியில் இருந்த இம்ரான் கான் அரசு மறுத்து விட்டது.

தற்போது நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கியது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அமைச்சர் ஜாவேத் லத்தீப் கூறும்போது, "பாகிஸ்தான் அரசியலில் நவாஸ் ஷெரீப் இல்லாமல் ஒரு சமநிலை சாத்தியமற்றது. அவர் நாடு திரும்ப வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவர் நாடு திரும்பியதும் மீண்டும் சிறைக்கு செல்ல பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நாவஸ்) கட்சி அனுமதிக்காது.

பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில், பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவார். இம்ரான்கானை எதிர்த்து நிற்க அவர் அவசியம் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் கூறும்போது, "எனது தந்தை நாடு திரும்ப விரும்புகிறேன். ஆனால் அவர் திரும்புவதற்கு சில சிக்கல்கள் தடையாக உள்ளது" என்றார்.

இதற்கிடையே நவாஸ் ஷெரீப் மீதான பனாமா பேப்பர்ஸ் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையை நீக்க உதவும் வகையில் சட்ட திருத்தங்களை கொண்டு வர ஷபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புவதற்காக நடவடிக்கை மும்முரமாக நடந்து வருகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News