உலகம்

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான மரப்பாலம் எரிந்து சேதம்

Published On 2022-08-08 05:05 GMT   |   Update On 2022-08-08 07:13 GMT
  • வனான் என்று பெயரிடப்பட்டுள்ள பாலம் உலகின் அமைதிக்கான பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பாலங்கள் கற்களால் கட்டப்படும்.
  • கலாச்சார முக்கியத்துவம் கொண்ட பாலத்தை மரத்தின் மூலம் தொழில்நுட்பத்துடன் வடிவமைத்திருந்தனர்.

பீஜிங்:

சீனாவின் கிழக்கே புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் 960-ம் ஆண்டு முதல் 1127-ம் ஆண்டு வரை சாங் வம்சம் ஆட்சி செய்தது. அந்த காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் ஒன்று எழுப்பப்பட்டது. இது 98.3 மீட்டர் நீளம் கொண்டது.

இந்த மரப்பாலம் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீப்பிடித்து எரியத் தொடங்கியதும் முதல் 20 நிமிடத்திலேயே மரப்பாலம் எரிந்து கீழே விழத் தொடங்கியது. நீண்ட வளைவுகளை கொண்ட இந்த பாலம் இயற்கை பேரிடர் காரணமாக எரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து சீன நிபுணர்கள் கூறியதாவது:-

இந்த பாலத்துக்கு மர்ம மனிதர்கள் யாராவது தீ வைத்திருக்க வேண்டும். தண்ணீரின் மேல் இந்த பாலம் அமைந்துள்ளது. எனவே தொடர்ச்சியாக தீப்பிடித்து எரிய வாய்ப்பு இல்லை. யாரோ தீ வைத்ததால் தான் பாலம் எரிந்துள்ளது.

வனான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் அமைதிக்கான பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பாலங்கள் கற்களால் கட்டப்படும். கலாச்சார முக்கியத்துவம் கொண்ட இந்த பாலத்தை மரத்தின் மூலம் தொழில்நுட்பத்துடன் வடிவமைத்திருந்தனர்.

வளைவுகளுடன் கூடிய 98.3 மீட்டர் நீளம் கொண்ட பாலத்தை அமைப்பது மிகவும் கடினம். ஆற்றின் மீது கலைநுட்பத்துடன் மரத்தில் சீனர்களின் உள்ளார்ந்த அறிவை நிரூபிக்கும் வகையில் கட்டப்பட்ட பாலத்தை நாம் இழந்துள்ளோம்.

இவ்வாறு சீன நிபுணர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News