உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கம்- 2 நாட்களுக்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்பு

Published On 2022-11-24 14:26 IST   |   Update On 2022-11-24 14:26:00 IST
  • இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
  • இந்த நிலநடுக்கத்தில் சிறுவனின் பெற்றோர் இறந்துவிட்டனர்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த 21ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. நேற்று காலையில் இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் தற்போது நிலநடுக்கத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் குழந்தைகள் ஆவர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.

இந்த நிலையில் இந்தோனேசிய நிலநடுக்க பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. சியாஞ்சூர் பகுதியில் குகநாங் துணை மாவட்டத்தில் நக்ராங் கிராமத்தில் நடந்த மீட்பு பணியில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். இடிபாடுகளில் 2 நாட்களாக சிக்கியிருந்த அஜ்கா மவுலானா மாலிக் என்ற அந்த சிறுவனை இந்தோனேசிய பேரிடர் மேலாண்கழகம் மீட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிறுவனின் பாட்டி உயிரிழந்துவிட்டார். அவரது உடல் அருகிலேயே சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். இந்த நிலநடுக்கத்தில் சிறுவனின் பெற்றோர் இறந்துவிட்டனர். அவர்களின் உடல்களை ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டன.

Tags:    

Similar News