உலகம்

அமெரிக்காவின் ஓகியோ நகரில் பொதுமக்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு- 4 பேர் பலி

Published On 2022-08-07 05:06 GMT   |   Update On 2022-08-07 05:06 GMT
  • ஸ்டீபன் மார்லோ ஓகியோவில் இருந்து தப்பி சென்றிருக்கலாம்.
  • துப்பாக்கி சூடு நடத்தியதாக கருதப்படும் அவரை யாரும் அணுக வேண்டாம்’ என்றனர்.

ஓகியோ:

அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள பட்லர் சவுன்ஷிப் பகுதியில் காரில் வந்த நபர் திடீரென்று துப்பாக்கியால் பொது மக்கள் மீது சரமாரியாக சுட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த நபர் தப்பி சென்றார். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியானவர்களின் உடலை கைப்பற்றினர்.

தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது துப்பாக்கி சூடு நடத்திய நபர் வெள்ளை நிற காரில் தப்பி சென்றது தெரியவந்தது.

விசாரணையில் அந்த நபர் ஸ்டீபன் மார்லோ என்று கருதப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்டீபன் மார்லோ புகைப்படத்தையும் அவர் தப்பி சென்ற காரின் படம், நம்பரையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, 'ஸ்டீபன் மார்லோ ஓகியோவில் இருந்து தப்பி சென்றிருக்கலாம். அவர் லெக்சிங்டன், கென்டக்கி, இண்டியானா போலீஸ், சிகாகோ ஆகிய நகரங்களில் ஏதாவது ஒன்றில் இருக்கலாம். துப்பாக்கி சூடு நடத்தியதாக கருதப்படும் அவரை யாரும் அணுக வேண்டாம்' என்றனர்.

Similar News