தமிழக மீனவர்கள் 13 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
- மீனவர்களை கைது செய்ததோடு, விசைப்படகையும் சிறைபிடித்தது.
- துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, விசைப்படகையும் சிறைபிடித்தது.
மேலும், கைது செய்யப்படுவதில் இருந்து தப்பி செல்ல முயன்ற இரண்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமுற்ற தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் தான் தமிழகத்தை சேர்ந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். மீனவர்கள் கைது சம்பவத்தை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.