உலகம்

பத்திரிகையாளர் மீது மிருகவெறி தாக்குதல்: செச்சென்யாவில் கொடூரம்

Published On 2023-07-05 11:16 IST   |   Update On 2023-07-05 11:17:00 IST
  • பெண் பத்திரிகையாளர் தலைமுடியை வெட்டப்பட்டு கொடூரம்
  • கைவிரல்கள் முறிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை

ரஷியாவின் செச்செனியா குடியரசில் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டிருக்கும் செய்தியும், அது சம்பந்தமாக வந்திருக்கும் புகைப்படமும் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

நொவாயா கெசெட்டா (Novaya Gazeta) எனப்படும் செய்தித்தாளின் பிரபல பத்திரிகையாளரான எலெனா மிலாஷினா (Yelena Milashina), அலெக்சாண்டர் நெமோவ் என்ற வழக்கறிஞருடன் உள்ளூர் விமான நிலையத்திலிருந்து செச்சென் தலைநகர் குரோஸ்னி நகருக்கு நேற்று காலை பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஆயுதமேந்திய முகமூடி அணிந்தவர்கள் அவரையும் அவரின் வழக்கறிஞரையும் காரை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தி பின்னர் மிருகத்தனமாக அவர்களை தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான பிறகு அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கும் அவர்கள், மேல் சிகிச்சைக்காக மாஸ்கோவிற்கு விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிலாஷினா அந்த வழக்கறிஞருடன் அரசியல் காரணங்களுக்காக அநியாயமாக துன்புறுத்தப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கில் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.

இது ஒரு தீவிரமான தாக்குதல் என கருத்து தெரிவித்த ரஷிய அரசாங்கம், இந்த தாக்குதல் குறித்து ரஷிய அதிபர் புதினுக்கு விளக்கமளிக்கப்படும் என்று கூறியிருக்கிறது. மாஸ்கோவில் உள்ள சில ரஷிய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இத்தாக்குதலைக் கண்டித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ஆனால், செச்சென்யாவை ஆள்பவரான ரம்ஜான் கதிரோவ் இதுகுறித்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. செச்சென்யா முஸ்லிம்கள் அதிகம் வாழும் தெற்கு மாகாணம் ஆகும். சோவித் ரஷியா பிரிந்த பின், இரண்டு கடும் போருக்குப்பின் ரம்ஜான் செச்சென்யாவின் அதிகாரித்து வந்தவர்.

மருத்துவமனையில் படுத்திருந்தபோது, செச்செனிய மனித உரிமை அதிகாரியான மன்சூர் சோல்டயேவிடம் இது திட்டமிட்ட உறுதியான கடத்தல் என்று குறிப்பிட்டார் மிலாஷினா.

இச்சம்பவம் குறித்து செய்திகள் தெரிவிப்பதாவது:-

இதில் ஈடுபட்டது ரஷியாவில் தடைசெய்யப்பட்ட மெமோரியல் எனும் ஒரு உரிமை குழு. மிலாஷினா மற்றும் நெமோவ் ஆகியோர் முகத்தில் கொடூரமாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, அவர்கள் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிதோடு மட்டுமில்லாமல், அவர்களது உபகரணங்களையும் அபகரித்து, அவற்றை அடித்து நொறுக்கியிருக்கிறது.

இவ்வாறு அடிக்கும்போது, இங்கிருந்து வெளியேறுங்கள். இனி எதுவும் எழுத வேண்டாம் என்று மெமோரியல் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இவ்வாறு செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது வெளியிடப்பட்டிருக்கும் அவரது புகைப்படத்தில் அவர் படுக்கையில் அமர்ந்திருப்பதும், அவர் முகம் முழுவதும் தாக்குதல்காரர்கள் வீசிய பச்சை சாயத்தையும் காண முடிகிறது. அவரது தலையை தாக்கியவர்கள், அவர் தலையை மொட்டையடித்திருக்கின்றனர். அவரது கையில் கட்டுகள் உள்ளன. அவரது விரல்கள் பல உடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மிலாஷினாவின் பத்திரிகையின் உரிமம் கடந்த ஆண்டு ரஷ்யாவில் பறிக்கப்பட்டது.

செசன்யாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை குறித்து பல வருடங்களாக விசாரித்து எழுதி வந்தார் மிலாஷினா. அப்பகுதியில் வாழும் ஓரினச்சேர்க்கையாளர்களின் வெகுஜன கைது மற்றும் சித்திரவதைகள் குறித்தும் அவர் செய்திகள் வெளியிட்டு வந்தார். முன்பே அவரது உயிருக்கு பல அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News