காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலி
- இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்துள்ளது.
- காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 52,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காசா:
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான மோதல் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்துள்ளது.
ஹமாஸ் ஆயுதக்குழு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலிள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 251 பேரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதைத் தொடர்ந்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் ராணுவம் போர் அறிவித்து, காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. பிணைக்கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டு வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் இருந்த பிணைக்கைதியான இஸ்ரேல்வாழ் அமெரிக்கர் இடன் அலெக்சாண்டர் என்பவரை நேற்று முன்தினம் விடுதலை செய்தனர்.
இதற்கிடையே, இந்தப் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், வடக்கு காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 22 குழந்தைகள் உள்பட 60 பேர் உயிரிழந்தனர் என காசாவில் உள்ள மருத்துவமனைகள் தகவல் தெரிவித்துள்ளன.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 52,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.