உலகம்

செயற்கைக் கால்கள் கொண்ட முன்னாள் ராணுவ வீரர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை

Published On 2023-05-20 22:28 GMT   |   Update On 2023-05-20 22:29 GMT
  • முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர், எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்றை படைத்தார்.
  • 2018ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார்.

பிரித்தானிய முன்னாள் ராணுவ வீரர் தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.

43 வயதான ஹரி புத்தமகர், நேற்று முன்தினம் பிற்பகல் 8848.86 மீட்டர் உச்சத்தை எட்டினார்.

இரட்டை கால்களை இழந்த முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர், அந்த பிரிவில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் என சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 2010ம் ஆண்டில் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரின்போது பிரிட்டிஷ் கோர்காவின் சிப்பாயாக போரிட்ட புத்தமகர் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

2017ம் ஆண்டில் எவரெஸ்ட் உட்பட, பார்வையற்றவர்கள், இரட்டை உறுப்புகள் இழந்தவர்கள் மற்றும் தனியாக ஏறுபவர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மலைகளில் ஏறுவதைத் தடைசெய்யும் மலையேறும் விதிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதனால், 2018ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார்.

பிறகு, தடைக்கு எதிராக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News