உலகம்

சிரியாவில் ராணுவ முகாமில் டிரோன் தாக்குதல்- 100 பேர் பலி

Published On 2023-10-06 08:07 GMT   |   Update On 2023-10-06 08:07 GMT
  • டிரோன் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
  • தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தான் இப்பகுதியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

ஹோம்சில்:

உலக நாடுகளின் போர்க்களமாக சிரியா திகழ்ந்து வருகிறது. அங்குள்ள ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில் ராணுவ பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவின் மத்திய மாகாணமான ஹோம்சில் பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இந்த முகாம் மீது நேற்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய டிரோன்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 100 பேர் வரை கொல்லப்பட்டதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் பலியானவர்கள் உடல்கள் சிதறி கிடந்தன.

இந்த டிரோன் தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தான் இப்பகுதியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சிரியா நாட்டின் பாதுகாப்பு மந்திரி கலந்து கொண்டார். விழா முடிந்து அவர் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அவரது உயிருக்கு குறி வைத்து டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News