உலகம்

டைட்டானிக் கப்பலை காண விருப்பமா..? நீர்மூழ்கி விபத்துக்கு பிறகும் வெளியான விளம்பரம்

Published On 2023-06-30 11:56 GMT   |   Update On 2023-06-30 11:56 GMT
  • ஆழ்கடல் சுற்றுப்பயண திட்டங்களை காலவரையின்றி மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.
  • அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2 பயணங்கள் திட்டமிடப்பட்டிருந்தது.

1912ம் வருடம், "டைட்டானிக்" எனும் சொகுசு கப்பல் வட அட்லாண்டிக் கடலில் தனது முதல் பயணத்திலேயே மூழ்கியதும், 1500 பேர் பலியானதும், உலகளவில் இன்று வரை பேசப்படும் ஒரு சோக நிகழ்வாக இருக்கிறது.

ஆழ்கடலில் தரைதட்டி நிற்கும் அந்த "டைட்டானிக்" கப்பலை காண அவ்வப்போது முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

அத்தகைய ஒரு முயற்சியாக இரு வாரங்களுக்கு முன், ஆழ்கடல் ஆராய்ச்சி சுற்றுப்பயணத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஓஷன்கேட் நிறுவனத்தின் "டைட்டன்" நீர்மூழ்கியில், டைட்டானிக் கப்பலை காண அதன் மாலுமி உட்பட 5 பேர் பயணித்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த நீர்மூழ்கி வெடித்து, அதில் பயணம் செய்த ஐவரும் பலியானார்கள். இதனால் ஆழ்கடல் சுற்றுப்பயண திட்டங்களை காலவரையின்றி மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

இதற்கிடையே, அடுத்த ஆழ்கடல் சுற்றுப்பயணத்துக்கான ஓஷன்கேட் நிறுவன விளம்பரம் தொடர்ந்து இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டைட்டானிக் கப்பலை காண விரும்புவோருக்கான சுற்றுபயண விபரங்களையும், கட்டணத்தையும் அதன் இணையதளத்தில் மீண்டும் விளம்பரப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் விவரங்களின்படி, ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை காணும் சுற்றுப்பயணத்திற்கு பயணத்தொகை சுமார் ரூ.2 கோடிக்கு மேலாகிறது. ஒரு பயணம் அடுத்த ஆண்டு ஜூன் 12ல் தொடங்கி ஜூன் 20 வரையிலும் மற்றொன்று ஜூன் 21 தொடங்கி ஜூன் 29 வரையிலும் என 2 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

முதல் நாளன்று பயணிகள், கடலோர நகரமான செயின்ட் ஜான்ஸுக்கு வர வேண்டும். அதன் பிறகு தங்களுடன் பயணம் செய்யும் குழுவினரை அவர்கள் சந்தித்து கப்பலில் ஏறுவார்கள். அக்குழு நீர்மூழ்கியில் டைட்டானிக் புதையுண்ட இடத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கிருந்து டைட்டானிக் மூழ்கிய இடத்திற்கான 400 நாட்டிகல் மைல் பயணத்தை தொடங்கும் போது, கப்பலில் வாழ்க்கைமுறையைப் குறித்து பயணிகள் உணர்ந்திருப்பார்கள்.

இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிறுவனம், காணாமல் போன, "டைட்டன்" நீர்மூழ்கியை தேடும் பணிகள் நடந்து வரும்போதே, "துணை பைலட்" (sub pilot) பணிக்கு ஆட்களை தேர்வு செயவ்து தொடர்பாக இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்ததும், அதற்கு எழுந்த கடும் விமர்சனங்களால், அது அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News