உலகம்

ராஜபக்சே சகோதரர்கள்

முன்னாள் அதிபர்களுக்கு தடை - கனடா தூதருக்கு இலங்கை அரசு சம்மன்

Published On 2023-01-12 02:33 IST   |   Update On 2023-01-12 02:33:00 IST
  • ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது.
  • தடை விதித்திருக்கும் முடிவு குறித்து கனடா தூதருக்கு இலங்கை சம்மன் அனுப்பியது.

கொழும்பு:

இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மே மாதமும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்றாா்.

இதற்கிடையே, இலங்கை முன்னாள் அதிபர்களான கோத்தபய, மகிந்த ராஜபக்சே, ராணுவ அதிகாரிகள் 2 பேர் என 4 பேர் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கனடாவில் உள்ள 4 பேரின் சொத்துக்கள் மற்றும் நிதி செயல்பாடுகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் கனடா நாடு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த 4 பேருக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டது குறித்து அதிருப்தி வெளியிட்ட இலங்கை வெளியுறவு அமைச்சகம், கொழும்புவில் உள்ள இலங்கைக்கான கனடா நாட்டு தூதரை வரவழைத்து, இந்த நடவடிக்கைக்கு அரசாங்கத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

Tags:    

Similar News