உலகம்

போதை பொருள் கடத்தியதாக சார்ஜாவில் கைது: இந்தி நடிகை கிரிசன் பெரிரா ஜெயிலில் இருந்து விடுதலை

Published On 2023-04-27 06:42 GMT   |   Update On 2023-04-27 06:42 GMT
  • தனது மகளை போதைப்பொருள் வழக்கில் 2 பேர் சிக்க வைத்ததாக தெரிவித்தார்.
  • கிரிசன் பெரிராவிடம் கொடுத்த கோப்பையில் போதைப்பொருள் மறைத்து வைத்து அனுப்பி உள்ளனர்.

சார்ஜா:

இந்தி நடிகையான கிரிசன் பெரிரா, கடந்த 1-ந்தேதி துபாய்க்கு சென்ற போது போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த கோப்பையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து நடிகை கிரிசன் பெரிராவை கைது செய்து சார்ஜா சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைத்தார்.

இதுதொடர்பாக நடிகையின் தாய் பிரமிளா, மும்பை போலீசில் அளித்த புகாரில், தனது மகளை போதைப்பொருள் வழக்கில் 2 பேர் சிக்க வைத்ததாக தெரிவித்தார். விசாரணையில் அது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நடிகையின் தாய்க்கும் அவரது வீட்டுக்கு அருகே வசிக்கும் அந்தோனி பவுல் என்பவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அந்தோனி பவுல் தனது நண்பர் ரவி போபதே மூலம் பழிவாங்க திட்டமிட்டார்.

அதன்படி ரவிபோபதே தன்னை வெப்தொடர் தயாரிப்பாளர் என்று நடிகையின் தாயிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அவரது ஹாலிவுட் வெப் தொடர்களில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார்.

நடிகை கிரிசன் பெரிராவை வெப் தொடர் வாய்ப்புக்கு துபாய்க்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார். அப்போது கிரிசன் பெரிராவிடம் கொடுத்த கோப்பையில் போதைப்பொருள் மறைத்து வைத்து அனுப்பி உள்ளனர்.

இதையடுத்து அந்தோனி பவுல், ரவிபோபதேவை போலீசார் கைது செய்தனர். மேலும் சார்ஜா ஜெயிலில் அடைக்கப்பட்ட கிரிசன் பெரிரா மீட்டுக்கொண்டு வரும் நடவடிக்கையில் மும்பை போலீசார், குடும்பத்தினர் ஈடுபட்டனர்.

கிரிசன் பெரிராவை போதைப்பொருள் கடத்தலில் சிக்கவைத்து அவருக்கு தெரியாமல் போதைப்பொருளை மறைத்து கொடுத்து அனுப்பியது பற்றி சார்ஜாவில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கிரிசன் பெரிரா, சார்ஜா ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து விரைவில் மும்பைக்கு வருகிறார்.

Tags:    

Similar News