உலகம்

ஆயுதம் ஏந்திய கும்பல் அட்டூழியம் - டிவி ஸ்டூடியோவை கைப்பற்ற முயற்சி

Published On 2024-01-10 03:57 GMT   |   Update On 2024-01-10 10:25 GMT
  • ஃபிடோ எனும் கொள்ளைக்கார கும்பல் தலைவன் சிறையிலிருந்து தப்பித்தான்
  • நேரலை நிகழ்ச்சியின் போது ஆயுதம் ஏந்திய கும்பல் தொலைக்காட்சி நிலையத்தில் அத்துமீறியது

தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையாரம் உள்ள நாடு, ஈக்வடார் (Ecuador).

கடந்த திங்கட்கிழமை ஈக்வடாரில், பல குற்றங்களை புரிந்து சிறையில் அடைக்கப்பட்ட அடால்ஃபோ மேசியஸ் வில்லமார் (Adolfo Macias Villamar) எனும் கைதி சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டான். அவனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. ஃபிடோ (Fito) என காவல்துறையால் அழைக்கப்படும் அவன், கோனெரோஸ் (Choneros) கும்பல் எனும் தொடர் குற்றங்களை புரிந்து வரும் ஒரு ஆயுதமேந்திய கொள்ளைக்கார குழுவின் தலைவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, 60 நாட்கள் எமர்ஜென்சி அந்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் குவாயாக்வில் (Guayaquil) பகுதியில் உள்ள தொலைக்காட்சி நிலையம் ஒன்றில், துப்பாக்கிகளை ஏந்தி, முகமூடி அணிந்த ஒரு கும்பல் அதிரடியாக நுழைந்து நிலையத்தை கைப்பற்றியது. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அச்சத்தில் செய்வதறியாது திகைத்தனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த கும்பலில் 13 பேர்களை கைது செய்தனர்.

ஈக்வடார் அதிபர் டேனியல் நொபோவா (Daniel Noboa) அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்தால், ஈக்வடார் நாட்டின் அருகே உள்ளெ பெரு (Peru) தனது எல்லையை பலப்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News